கலவரத்தை தூண்டும் விதமாக ‘டிக்-டாக்கில்’ வீடியோ பதிவிட்டவர் கைது


கலவரத்தை தூண்டும் விதமாக ‘டிக்-டாக்கில்’ வீடியோ பதிவிட்டவர் கைது
x
தினத்தந்தி 4 July 2019 11:15 PM GMT (Updated: 4 July 2019 7:35 PM GMT)

கலவரத்தை தூண்டும் விதமாக ‘டிக்-டாக்கில்’ வீடியோ பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முதுகுளம் காலனி தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் சத்தியமூர்த்தி (வயது 31). இவர் சென்னையில் தங்கியிருந்து சினிமா இயக்குனர்களுக்கு உதவியாளராகவும், இரவு நேரத்தில் டிபன் கடையில் புரோட்டா மாஸ்டராகவும் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இவர் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களை பற்றி கலவரத்தை தூண்டும் விதமாக வீடியோவில் பேசி, அதனை சமூக வலைத்தளங்களான ‘பேஸ்புக், ‘டிக்-டாக்கில்’ பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோ பதிவு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, அரியலூர் மாவட்டம் குண்டவெளி கிராம நிர்வாக அதிகாரி ஜாஸ்மின், மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

இதில் சத்தியமூர்த்தி, சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற மீன்சுருட்டி போலீசார் நேற்று முன்தினம் இரவு சத்தியமூர்த்தியை கைது செய்து, அரியலூர் அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story