திருச்சி துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையிலான அரைவட்ட சுற்றுச்சாலை பணி மீண்டும் தொடங்கியது


திருச்சி துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையிலான அரைவட்ட சுற்றுச்சாலை பணி மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 4 July 2019 11:00 PM GMT (Updated: 4 July 2019 8:11 PM GMT)

திருச்சி துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையிலான அரைவட்ட சுற்றுச்சாலை பணி மீண்டும் தொடங்கியது.

திருச்சி,

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே அசூர் என்ற இடத்தில் தொடங்கி, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை, மதுரை தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை கடந்து திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே சேரும் வகையில் அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதன் மொத்த நீளம் 43 கிலோ மீட்டர் ஆகும்.

தஞ்சாவூர் சாலை துவாக்குடி அசூரில் இருந்து மதுரை சாலையில் பஞ்சப்பூர் என்ற இடம் வரை 26 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு பகுதியாகவும், பஞ்சப்பூரில் இருந்து கரூர் சாலை ஜீயபுரம் வரையிலான 17 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு பகுதியாகவும் பிரித்து, சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. ஆனால் தாயனூர், புங்கனூர், சாத்தனூர் பகுதியில் ஏரி, குளங்கள் வழியாக சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் சாலை அமைக்கும் பணிகள் ஐகோர்ட்டு உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டன.

பின்னர் ஏரி, குளங்களின் நீராதாரம் பாதிக்காத வகையில், உயர்மட்ட பாலம் அமைத்து இந்த திட்டத்தை நிறைவேற்றும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஏற்கனவே 15 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் முடிந்தன. சிறிய பாலங்களும் சில இடங்களில் கட்டப்பட்டன. புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அது தஞ்சை சாலையுடன் இணைக்கப்படாமல் இடையில் சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு கிடப்பில் போடப்பட்டது.

நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள அரை வட்ட சுற்றுச்சாலை பணியை விரைவாக தொடங்குவதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி, தற்போது துவாக்குடி-பஞ்சப்பூர் வரையிலான அரைவட்ட சுற்றுச்சாலையில் மாத்தூர் ராசிபுரம்-ஆவூர் இடையே மீண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சாலையில் பள்ளமான இடத்தில் சாலையின் இருபுறமும் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி நிரவப்பட்டு பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் அரைவட்ட சாலை செல்லும் இடத்தில் உள்ள கருவேலமரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. அத்துடன் அரைவட்ட சாலைக்காக வீடு ஒன்றும் இடிக்கப்பட்டது. துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையிலான அரை வட்ட சுற்றுச்சாலையை பொறுத்தவரை சுமார் 90 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன.

அதேபோல் பஞ்சப்பூரில் இருந்து திருச்சி உடையான்பட்டி-ஓலையூர் சாலை வரையும் எந்த பணியும் தொடங்கப்படாமல் அப்படியே முடங்கி போய் கிடந்தன. முடங்கிய இந்த சாலைப்பணிகளை மீண்டும் தொடங்க கோரி, விவசாய சங்க தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்தன. இதனைத்தொடர்ந்து அரைவட்ட சுற்றுச்சாலை பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த பணியை செய்வதற்காக ஒப்பந்தம் பெற்றிருந்த நிறுவனம் பின்வாங்கியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தை ஒதுக்கிவிட்டு, புதிய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, டெல்லியில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு அந்த அலுவலகம் அனுமதி வழங்கி உள்ளது.

இதனைத்தொடர்ந்து புதிய ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் இன்னும் ஒரு மாத காலத்தில் நிறைவுபெற்றதும், பணியானது மீண்டும் தொடங்கி, 1½ ஆண்டு காலத்தில் முடிவடையும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதிய திட்ட மதிப்பீட்டின்படி குமாரமங்கலம் ரெயில் நிலையம் அருகில் ஒரு மேம்பாலம், இதுதவிர 3 இடங்களில் சிறிய பாலங்கள், 3 இடங்களில் மாவட்ட சாலைகளை கடந்து செல்வதற்கான சுரங்கப் பாதைகள், மற்றும் 8 இடங்களில் குறும் பாலங்கள் அமைக்கப்பட இருக்கிறது.

அரை வட்ட சுற்றுச்சாலை பணி முடிவடைந்தால் தென் மாவட்டங்களில் இருந்து தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி மாநகருக்குள் வராமல் இந்த சாலை வழியாக செல்ல முடியும். இதன் காரணமாக திருச்சி மாநகரில் போக்குவரத்து நெருக்கடி குறையும். பஞ்சப்பூரில் இருந்து கரூர் சாலையை இணைப்பதற்கான மீதம் உள்ள 17 கிலோ மீட்டர் அரை வட்ட சுற்றுச்சாலை பணியும் இதே போல் தொடங்கினால் கரூர், கோவை மற்றும் சேலம் மார்க்கத்தில் செல்லும் வாகனங்களும் திருச்சி மாநகருக்குள் வராமலேயே பயணிக்க முடியும்.

Next Story