கவர்னர் கிரண்பெடியை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


கவர்னர் கிரண்பெடியை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 July 2019 12:33 AM GMT (Updated: 5 July 2019 12:33 AM GMT)

குடிநீர் பிரச்சினையில் தமிழக அரசை விமர்சித்த கவர்னர் கிரண்பெடியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி,

குடிநீர் பிரச்சினையில் தமிழக அரசை விமர்சித்தும், தமிழர்களை சுயநலவாதிகள், கோழைகள் என்று கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் விமர்சித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

கவர்னர் தனது கருத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசு அவரை திரும்பப்பெறக் கோரியும் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.

அதன்படி அ.தி.மு.க.வினர் கவர்னர் மாளிகை அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கவர்னர் கிரண்பெடி இந்த மாநில பிரச்சினையைத்தான் கவனிக்கவேண்டும். அதைவிடுத்து தமிழக அரசு, தமிழ்ச் சமுதாய மக்களைப்பற்றி பேச இவர் யார்? அவருக்கு அதற்கு என்ன தகுதி உள்ளது? டெல்லி மக்களால் துரத்தியடிக்கப்பட்ட அவர் பாரதீய ஜனதாவின் காலை பிடித்து கவர்னராக வந்துள்ளார்.

தமிழகத்தில் அமைந்துள்ளது ஜெயலலிதாவின் அரசு. அதை குறைசொல்ல அவருக்கு என்ன தகுதி உள்ளது? ஏற்கனவே அவர் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட இலவச திட்டங்களை குறைகூறி உள்ளார். மழை வந்தால் வெள்ளமும், வறட்சி வந்தால் குடிநீர் பற்றாக்குறையும் வரும்.

புதுவை முத்தியால்பேட்டை தொகுதியில் நல்ல குடிநீர் வழங்க ரூ.18 கோடியில் உருவாக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்தவிடாமல் தடுத்தவர்தான் கவர்னர் கிரண்பெடி. தமிழக மக்களை கோழை என்கிறார். நாங்கள் நினைத்தால் துரத்தி அடிப்போம். எங்களுக்கு ஒருமணிநேரம் போதும். அவர் நாவடக்கத்துடன் பேசவேண்டும்.

10 நாட்களுக்கு ஒருமுறை எதையாவது பேசுகிறார். நாங்கள் வீரத்தை காட்டினால் உங்களால் தாங்க முடியாது. தமிழர்களின் சகிப்புத்தன்மையை நீங்கள் சீண்டக்கூடாது. இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட புறப்பட்டனர். ஆனால் ஆர்ப்பாட்ட மேடைக்கு பின்புறம் போலீசார் தடுப்புக் கட்டைகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

அந்த தடுப்புக்கட்டையின் மீது ஏறி நின்ற அவர்கள் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களை போலீசார் சமரசப்படுத்தவே அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Next Story