திருச்சி கிராப்பட்டி மேம்பாலத்தின் கீழ் ரூ.13 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்


திருச்சி கிராப்பட்டி மேம்பாலத்தின் கீழ் ரூ.13 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 July 2019 10:45 PM GMT (Updated: 6 July 2019 9:17 PM GMT)

திருச்சி கிராப்பட்டி மேம்பாலத்தின்கீழ் ரூ.13 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருச்சி,

திருச்சி கிராப்பட்டி-எடமலைப்பட்டிபுதூர் இடையே ரெயில்வே மேம்பாலம் கடந்த 2013-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. ஆனாலும், இன்னமும் பாலம் பராமரிப்பு என்பது அறவே இல்லாமல் இருந்தது. கட்டிய மேம்பாலத்திற்கு இதுவரை வர்ணம் அடிக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மேம்பாலத்தின் தடுப்பு சுவரின் மீது தடுப்பு கம்பிகள் பதிக்கப்பட்டன. மழை பெய்தால் தண்ணீர் சீராக வெளியேறும் வகையில் பிளாஸ்டிக் குழாய்களும் பொருத்தப்பட்டன.

வாரத்தில் ஒருநாள் செவ்வாய்க்கிழமைதோறும் கிராப்பட்டி மேம்பாலத்தின்கீழ் உள்ள அணுகுசாலையில் வாரச்சந்தை நடக்கிறது. அதுபோல எடமலைப்பட்டி புதூரில் இறங்கும் பாலத்தின் அணுகுசாலையில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. சந்தை முடிந்து இரவு 10 மணிக்கு மேல் கடையை காலி செய்து விட்டு செல்லும் வியாபாரிகள் குப்பைகளை பாலத்தில் அடியில் குவித்து விட்டு செல்வது வழக்கம்.

தீ வைத்து எரிக்கும் அவலம்

மேலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களும் தள்ளு வண்டிகள் மூலம் வீதிகளில் சேகரித்து வரும் குப்பைகளையும் பாலத்திற்கு கீழ் அடிப்பகுதியில் குவித்து விட்டு பின்னர் லாரி மூலம் அகற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். சில நேரங்களில் குப்பையில் தீ வைத்து எரித்துச் செல்லும் அவலம் நிகழ்ந்தது.

இதனால், கோடிக்கணக்கில் செலவழித்து போக்குவரத்து மற்றும் மக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட மேம்பாலம் விரைவில் பலமிழந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் ராட்சத தூண்கள், கட்டிடங்கள் கரும்புகை படிந்து அலங்கோலமாக காட்சி அளித்தது. மழைநீர் செல்ல பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் தீயில் கருகி உருக்குலைந்தது. இது தொடர்பான விரிவான செய்தி சமீபத்தில் தினத்தந்தியில் வெளியானது.

ரூ.13 லட்சம்

இதன் எதிரொலியாக, தற்போது கிராப்பட்டி மேம்பாலத்தின்கீழ் அணுகுசாலையின் இருபுறமும் ரூ.13 லட்சம் செலவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். நெடுஞ்சாலைத்துறையின் (மேம்பாலம் பராமரிப்பு) திருச்சி ஸ்ரீரங்கம் உட்கோட்டம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உதவி பொறியாளர் தீபிகா மேற்பார்வையிட்டு வருகிறார்.

கிராப்பட்டி மேம்பாலத்தின் கீழ் இருபுறமும் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், தேவையற்ற வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும், ஆக்கிரமித்து கடைகள் அமைப்பதை தடுக்கவும் தடுப்புச்சுவர் கட்டி பராமரிக்கப்பட உள்ளதாகவும், இந்த பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக எடமலைப்பட்டிபுதூர் மேம்பாலத்தின் கீழ் அணுகுசாலையில் தடுப்புச்சுவர் கட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Next Story