கிரண்பெடி தலைமையில் நடந்த புதுவை திட்டக்குழு கூட்டம் பாதியில் ரத்து; முதல் -அமைச்சர், அமைச்சர்கள் வெளிநடப்பு


கிரண்பெடி தலைமையில் நடந்த புதுவை திட்டக்குழு கூட்டம் பாதியில் ரத்து; முதல் -அமைச்சர், அமைச்சர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 6 July 2019 11:00 PM GMT (Updated: 6 July 2019 9:42 PM GMT)

சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைக்காததற்கு அமைச்சர்கள், எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கவர்னர் தலைமையில் நடந்த திட்டக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி புதுவை சட்டசபையில் அரசின் 5 மாத (ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு) செலவிலங்களுக்கு ஒப்புதல் (இடைக்கால பட்ஜெட்) பெறப்பட்டது. தேர்தல் முடிந்த நிலையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

பட்ஜெட் தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு துறை வாரியாக அமைச்சர்களுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். அதன்பின் வர்த்தக பிரமுர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரின் கருத்தையும் கேட்டார்.

இந்தநிலையில் புதுவை மாநில பட்ஜெட் தொகையை இறுதி செய்வது தொடர்பான மாநில திட்டக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதல் -அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி., தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலாளர்கள், இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு கடந்த காலங்களில் புதுவை சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இந்த முறை அழைக்கப்படாததால் அவர்கள் யாரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

கூட்டம் தொடங்கிய நிலையில் ராஜ்யசபா எம்.பி.யான கோகுலகிருஷ்ணன் அங்கு வந்தார். அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவரை ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். உரிய பதில் கிடைக்காததால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இதேபோல் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோரும் சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைக்காதது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது தரப்பில் தவறு ஏதும் இல்லை என்பது தொடர்பாக விளக்கமளித்தார். சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைக்க வலியுறுத்தி கவர்னருக்கு தான் எழுதிய கடிதத்தையும் அவர்களிடம் காட்டினார்.

மாநில திட்டக்குழுவின் தலைவர் கவர்னர் என்பதால் அவர்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும். சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைத்துதான் கூட்டம் நடத்த வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தினர். இதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இதனால் கவர்னர் கிரண்பெடி அதிர்ச்சி அடைந்தார். முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளியேறியதால் கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்ட நிலையில் வெளியே வந்த மாநில திட்டக்குழுவின் தலைவரான கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறுகையில், ‘திட்டக்குழு கூட்டத்தில் விதிமுறைகளின்படி யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்த கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்ற கோப்பு வந்தது. நான் அதை தலைமை செயலாளர், துறை செயலாளருக்கு அனுப்பிவிட்டேன். அந்த கோப்பினை அவர்கள் பார்க்கவில்லை. வருகிற 13-ந்தேதி விதிமுறைகளின்படி கூட்டம் நடைபெறும்’ என்றார்.

தொடர்ந்து அவர் அதிகாரிகளை அழைத்து நடந்த சம்பவம் தொடர்பாக பேசிவிட்டு அவர்களை கடிந்துகொண்டார். கவர்னர் தலைமையில் நடந்த கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டதால் புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமிக்கு அழைப்பு அனுப்பப்பட்டும் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story