அம்பத்தூரில் டாஸ்மாக் பாரில் ரவுடி வெட்டிக்கொலை; 5 பேருக்கு வலைவீச்சு


அம்பத்தூரில் டாஸ்மாக் பாரில் ரவுடி வெட்டிக்கொலை; 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 July 2019 11:00 PM GMT (Updated: 6 July 2019 10:54 PM GMT)

அம்பத்தூரில், டாஸ்மாக் பாரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய அவரது நண்பர்கள் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை அம்பத்தூர் திருவள்ளுவர் நகர் அண்ணா 2–வது தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(வயது 42). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளது. தற்போது ஆட்டோ ஓட்டி வந்தார்.

நேற்று இரவு 9 மணியளவில் அரிகிருஷ்ணன், தனது நண்பர்களான கரிகாலன்(30), மணிவண்ணன், நெப்போலியன், தாஸ் உள்பட 5 பேருடன் சேர்ந்து அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் பாரில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினார்.

போதை தலைக்கேறியதில் நண்பர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த கரிகாலன் உள்ளிட்ட நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அரிகிருஷ்ணனை சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த காயம் அடைந்த அரிகிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே நண்பர்கள் 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 5 பேரையும் தேடி வருகின்றனர்.

அவர்கள் கைதானால்தான் அரிகிருஷ்ணன் கொலைக்கு உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story