எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து வருகிற 9-ந் தேதி சட்டப்படி ஆலோசித்து முடிவு எடுப்பேன் - சபாநாயகர் ரமேஷ்குமார் பரபரப்பு பேட்டி


எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து வருகிற 9-ந் தேதி சட்டப்படி ஆலோசித்து முடிவு எடுப்பேன் - சபாநாயகர் ரமேஷ்குமார் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 6 July 2019 10:55 PM GMT (Updated: 6 July 2019 11:01 PM GMT)

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து வருகிற 9-ந் தேதி சட்டப்படி ஆலோசித்து முடிவு எடுப்பேன் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் நேற்று பெங்களூரு விதானசவுதாவுக்கு வந்து சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுக்க முயன்றனர். ஆனால் சபாநாயகர் ரமேஷ்குமார், உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தனது உறவினரை பார்க்க புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 11 தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அலுவலக செயலாளரிடம் கொடுத்துவிட்டு சென்றிருந்தனர்.

அவர்களில் முனிரத்னா மட்டும் ராஜினாமா கொடுக்காமல் இருந்தார். பின்னர் அவரும் நேற்று மாலையில் சபாநாயகரின் அலுவலக செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார். முன்னதாக நேற்று மதியம் சபாநாயகர் ரமேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். முன்னதாக என்னை சந்திப்பதற்காக எந்தவொரு எம்.எல்.ஏ.க்களும் அனுமதி கேட்கவில்லை. அனுமதி கேட்டு இருந்தால் கண்டிப்பாக கொடுத்திருப்பேன். நான் முதல்-மந்திரிக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ, பா.ஜனதா கட்சிக்கோ ஆதரவானவன் கிடையாது. சபாநாயகராக என்ன செய்ய வேண்டுமோ?, அதனை செய்வேன். நாளை (அதாவது இன்று) விடுமுறை ஆகும். அதற்கு மறுநாள் (8-ந் தேதி) நான் வெளியூர் செல்கிறேன்.

அதனால் வருகிற 9-ந் தேதி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து ஆலோசித்துவிட்டு சட்டப்படி முடிவு எடுப்பேன். அன்றைய தினம் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களுடன் பேச உள்ளேன். இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிப்பது, புதிய அரசு அமைப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி சட்டசபையில் தான் தீர்மானிக்கப்படும். நான் ஆஸ்பத்திரிக்கு சென்றபோது தொலைக்காட்சி சேனல்களின் நிருபர்கள் கேள்வி கேட்டதால் கோபம் அடைந்தேன். சில கேள்விகளை எங்கு கேட்க வேண்டுமோ?, அங்கு தான் கேட்க வேண்டும். இவ்வாறு சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.


Next Story