திருவையாறு அருகே காவலாளியை கொன்று உடல் புதைப்பு மனைவி, மாமனார்-மாமியாரிடம் தீவிர விசாரணை


திருவையாறு அருகே காவலாளியை கொன்று உடல் புதைப்பு மனைவி, மாமனார்-மாமியாரிடம் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 7 July 2019 11:15 PM GMT (Updated: 7 July 2019 6:36 PM GMT)

திருவையாறு அருகே காவலாளி கொன்று புதைக்கப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மனைவி, மாமனார், மாமியாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவையாறு,

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி காட்டூரை சேர்ந்தவர் முனியப்பன்(வயது35). இவர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஆற்றங்கரை காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய தாய் மாமன் திருவையாறு அருகே உள்ள ஒக்கக்குடியை சேர்ந்த பழனிசாமி. இவருடைய மகள் மாரியம்மாளை(25), முனியப்பன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2½ வயதில் மகன் உள்ளான். முனியப்பனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், இதன் காரணமாக மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மாரியம்மாள் ஒக்கக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். முனியப்பன் மனைவியை பார்ப்பதற்காக ஒக்கக்குடிக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒக்கக்குடிக்கு வந்த முனியப்பனுக்கும், அவருடைய மனைவி மாரியம்மாளுக்கும் இடையே தகராறு நடந்தது. அதன் பிறகு முனியப்பன் மாயமாகி விட்டார். அவர் வேலைக்கும் செல்லவில்லை. பொதுப்பணித்துறை அலுவலக ஊழியர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை காணவில்லை.

இதுகுறித்து திருவையாறு தனிப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறின்போது முனியப்பன் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பனின் மனைவி மாரியம்மாள், மாமனார் பழினிசாமி மற்றும் மாமியார் உள்ளிட்டோரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் முனியப்பன் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்பது பற்றி விசாரணை நடத்த அவருடைய உடலை போலீசார் இன்று (திங்கட்கிழமை) தோண்டி எடுக்க உள்ளனர். விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனை நடக்கிறது.

இதனிடையே ஒக்கக்குடி பகுதியில் முனியப்பனின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் கண்டறிந்து உள்ளனர். விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த அந்த இடத்தில் தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் நிபுணர்கள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

Next Story