குமரி மாவட்டத்தில் தொடர் மழை: பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


குமரி மாவட்டத்தில் தொடர் மழை: பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 July 2019 11:00 PM GMT (Updated: 7 July 2019 9:00 PM GMT)

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை கடந்த 28-ந் தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தினமும் அணையில் இருந்து வினாடிக்கு 756 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாலும், பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் தேவைப்படுவதாலும், பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 25 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதை மேலும் 25 கன அடி உயர்த்தி பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று 50 கன அடியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று காலையும் மழை பெய்தது. மேலும் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 259 கனஅடி நீர் வந்தது. அது நேற்று 271 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு 61 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

மழை அளவு

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை-2, சிற்றார் 1-2, பூதப்பாண்டி-2.4, சுருளோடு-2.6, கன்னிமார்-3.4, ஆரல்வாய்மொழி-1, பாலமோர்-9.2, கொட்டாரம்-4.6, முக்கடல்-6 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

நாகர்கோவிலில் பெய்த மழை காரணமாக பல்வேறு முக்கிய சாலைகளில் காணப்படும் பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம் போல காட்சி அளித்தது. குறிப்பாக கோட்டார் போலீஸ் நிலையம் முன் சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. அதில் தண்ணீர் தேங்கியிருந்ததால் பள்ளத்தின் தன்மை தெரியவில்லை. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பள்ளத்தில் தவறி விழும் நிலை ஏற்பட்டது. மேலும் கம்பளம் பகுதியிலும் மழை நீர் தேங்கி நின்றது. வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் அருகேயும் சாலையில் மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.

திற்பரப்பு அருவி

திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அருவியில் குளித்து விட்டு, அருவியின் மேல் பகுதிக்கு சென்று படகு சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.

Next Story