காரைக்குடி அருகே மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற தொழிலாளி; போலீசில் சரண் அடைந்தார்


காரைக்குடி அருகே மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற தொழிலாளி; போலீசில் சரண் அடைந்தார்
x
தினத்தந்தி 7 July 2019 11:42 PM GMT (Updated: 7 July 2019 11:42 PM GMT)

மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் அருகே சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர், வெள்ளைச்சாமி (வயது 55). கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி செல்லம்மாள் (50). இவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த வெள்ளைச்சாமி அங்கு கிடந்த கட்டையை எடுத்து செல்லம்மாளை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் செல்லம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதனை அறியாத வெள்ளைச்சாமி தூங்கிவிட்டார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, செல்லம்மாள் காயத்தோடு இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளைச்சாமி, உடனடியாக பள்ளத்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.

பின்னர் பள்ளத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். செல்லம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கணவர் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story