விழுப்புரத்தில், தொழில்நெறி வழிகாட்டுதல் குறித்த விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


விழுப்புரத்தில், தொழில்நெறி வழிகாட்டுதல் குறித்த விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 July 2019 10:45 PM GMT (Updated: 8 July 2019 5:48 PM GMT)

விழுப்புரத்தில் தொழில்நெறி வழிகாட்டுதல் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவ- மாணவிகள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நேற்று காலை விழுப்புரத்தில் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை கலெக்டர் சுப்பிரமணியன், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு திறன் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இப்பேரணி விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது. இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பிரபாவதி மற்றும் உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம், திண்டிவனம் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story