திருமானூர் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த 4 பேர் கைது


திருமானூர் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 July 2019 11:00 PM GMT (Updated: 8 July 2019 7:31 PM GMT)

திருமானூர் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிகுழி கிராமத்தை சேர்ந்த செல்வராஜின் மகன் சரண்ராஜ்(வயது 29). கூலி தொழிலாளி. இவருக்கு சுதா(21) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் நேற்று இரவு கள்ளூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை வழி மறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சரண்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 பேர் கைது

விசாரணையில் உயிரிழந்த சரண்ராஜிக்கும், அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல்(55) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. அதன் காரணமாகவே ஜோதிவேலின் ஆதரவாளர்கள் சரண்ராஜை கொலை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் ஜோதிவேல், மோகன்(33), குணசேகரன், தனபால், சுந்தரராஜன், சூர்யா(25), அஜித்(24), மணிகண்டன், முத்துப்பாண்டி ஆகிய 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் சூர்யா, அஜித், மணிகண்டன், முத்துப்பாண்டி ஆகிய 4 பேரை தற்போது கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர். 

Next Story