ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் வழங்கக்கோரி மறியல் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு


ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் வழங்கக்கோரி மறியல் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 July 2019 10:00 PM GMT (Updated: 9 July 2019 7:48 PM GMT)

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் விளக்கணாம்பூடி கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் ஆர்.கே.பேட்டை-அம்மையார்குப்பம சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொதுமக்களை சமாதானப்படுத்தி அவர்களுக்கு விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல் ஆர்.கே. பேட்டை பஜாரில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்தபகுதி மக்கள் காலி குடங்களுடன் திடீரென்று சோளிங்கர்-திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து சேர்ந்தனர். அந்த பகுதிக்கு டிராக்டர்கள் மூலம் குடிநீர் வழங்குவதாக அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதே ஒன்றியத்தை சேர்ந்த ஸ்ரீகாளிகாபுரம் கிராம மக்கள் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து அதை அப்படியே மக்கள் உபயோகத்திற்கு கொண்டுவராமல் விட்டுவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். உடனடியாக ஊழியர்களை அனுப்பி அவற்றை மக்கள் உபயோகத்திற்கு கொண்டுவருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

Next Story