கோட்டக்குப்பம் அருகே, பெண்ணிடம் 9 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு - வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு


கோட்டக்குப்பம் அருகே, பெண்ணிடம் 9 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு - வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 July 2019 10:15 PM GMT (Updated: 9 July 2019 8:14 PM GMT)

கோட்டக்குப்பம் அருகே பெண்ணிடம் 9 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் கலியன் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தன் (வயது 38). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஜெயந்தன் தன்னுடைய காரை பழுதுபார்ப்பதற்காக வில்லியனூரில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் நிறுத்தியிருந்தார். அந்த காரை எடுத்து வருவதற்காக ஜெயந்தன் தனது மனைவி நித்யாவுடன் (32) ஒரு மொபட்டில் நேற்று முன்தினம் இரவு வில்லியனூருக்கு புறப்பட்டார். பின்னர் அங்குள்ள ஒர்க்‌ஷாப்பில் இருந்து ஜெயந்தன் காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். அவரது மனைவி நித்யா, காரை பின்தொடர்ந்து மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த பெரம்பை என்ற இடத்தில் வரும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென நித்யா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தார். உடனே அவர் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

இதை பார்த்ததும் ஜெயந்தன் தனது காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அதற்குள் அந்த வாலிபர் நகையுடன், தான் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

இதுகுறித்து ஜெயந்தன், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story