ஆர்.பி.எப். போலீசாரின் ‘ஆபரேசன் தண்டர்’ சோதனை: முறைகேடாக விற்க இருந்த 365 ரெயில் டிக்கெட்டுகள் பறிமுதல் 32 பேர் கைது


ஆர்.பி.எப். போலீசாரின் ‘ஆபரேசன் தண்டர்’ சோதனை: முறைகேடாக விற்க இருந்த 365 ரெயில் டிக்கெட்டுகள் பறிமுதல் 32 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2019 10:15 PM GMT (Updated: 9 July 2019 8:16 PM GMT)

ஆர்.பி.எப். போலீசாரின் ‘ஆபரேஷன் தண்டர்’ என்ற சோதனை மூலம் முறைகேடாக விற்க இருந்த 365 ரெயில் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரே நாளில் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

இந்தியா முழுவதும் 16 ரெயில்வே தலைமையங்களுக்குட்பட்ட ரெயில் நிலைய பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத வணிகமாக சிலர் ரெயில் டிக்கெட்டுகளை எடுத்து முறைகேடாக விற்பனை செய்வதை தடுக்க ‘ஆபரேஷன் தண்டர்’ என்ற பெயரில் ஒரே நாளில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, தெற்கு ரெயில்வேக்குட்பட்ட ஆர்.பி.எப். போலீசாரால் ‘ஆபரேஷன் தண்டர் சோதனை’ மேற்கொள்ளப்பட்டது. அப்போது முறையாக லைசென்ஸ் பெறாமல் ரெயில் டிக்கெட் விற்பனை செய்ததாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 365 ரெயில் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்து 4 ஆயிரத்து 107 ஆகும். அதே நாளில் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், இன்ஸ்பெக்டர் சுர்ஜித்குமார் ராய் தலைமையில் சோதனை மேற்கொண்டு ரூ.16 ஆயிரத்து 575 மதிப்பிலான டிக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி ஆர்.பி.எப். மூலம் கடந்த ஆண்டு(2018) அங்கீகரிக்கப்படாத வணிகமாக ரெயில் டிக்கெட்டுகளை முறைகேடாக விற்பனை செய்ததாக ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 661 மதிப்பிலான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு ரூ.66 ஆயிரத்து 855 மதிப்பிலான டிக்கெட்டுகள் பறி முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் திருச்சி ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டர் சுர்ஜித்குமார் ராய் தெரிவித்தார்.

சமீபத்தில் மத்திய ரெயில்வே அமைச்சகம், சுகாதார பிரச்சினை காரணமாக ரெயில்நீர் பிராண்டுகள் வாட்டர் பாட்டில்களை ரெயில்வே வளாகங்களில் மட்டுமே விற்கப்பட வேண்டும் என்றும், வேறு பிராண்டு குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அப்படி நடத்தப்படும் சோதனைக்கு, ‘ஆபரேஷன் திர்ஸ்ட்’ என பெயரிடப்பட்டது.

அதன்படி, திருச்சி ஆர்.பி.எப். போலீசார் திருச்சி ஜங்சன் ரெயில் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் ரெயில்நீரை தவிர வேறு பிராண்டு பாட்டில் குடிநீர் விற்கப்படுகிறதா? என ரெயில் நிலையங்களில் உள்ள ஸ்டால்கள், ஓட்டல்கள் ஆகியவற்றிலும் சோதனை நடத்தி நட வடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Next Story