கேக் தயாரிக்க திருட்டுத்தனமாக விற்பனை: ஒரு லாரி அழுகிய முட்டைகள் பறிமுதல், குடோனுக்கும் ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை


கேக் தயாரிக்க திருட்டுத்தனமாக விற்பனை: ஒரு லாரி அழுகிய முட்டைகள் பறிமுதல், குடோனுக்கும் ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 9 July 2019 11:00 PM GMT (Updated: 9 July 2019 8:39 PM GMT)

மதுரையில் கேக் தயாரிக்க திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட அழுகிய முட்டைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்ததுடன், முட்டைகள் வைத்திருந்த குடோனுக்கும் சீல் வைத்தனர்.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் ஒரு சில பேக்கரிகளில் ரசாயன வண்ண பொடிகள் கலந்த கேக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கேக்குகளை தயாரிக்க அழுகிய முட்டைகள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்தன.

இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சோமசுந்தரம் தலைமையிலான குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள ஒரு குடோனில் அழுகிய முட்டைகள் மற்றும் லேசாக உடைந்த முட்டைகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குடோனில் இருந்து ஒரு லாரி நிறைய அழுகிய முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் அந்த முட்டைகள் அனைத்தும் சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் அழிக்கப்பட்டன. மேலும், இது குறித்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நாமக்கல்லில் இருந்து சேதமடைந்த மற்றும் அழுகிய முட்டைகள் மதுரை தத்தனேரி குடோனுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பெட்டிக்கடைகள் மற்றும் பேக்கரிகளுக்கு திருட்டுத்தனமாக ஒரு முட்டை ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இந்த முட்டைகள் பெரும்பாலும், பெட்டிக்கடைகளில் விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்படும் கேக்குகளில் பயன்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டது. இந்த முட்டை கலந்த கேக்குகளை உண்பதால், தீராத வயிற்று வலி ஏற்படும் அபாயம் உள்ளது. அழுகிய முட்டைகள் பதுக்கி வைத்திருந்த குடோனுக்கும் ‘சீல்‘ வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story