நாமக்கல்லில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு


நாமக்கல்லில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 10 July 2019 11:00 PM GMT (Updated: 10 July 2019 5:33 PM GMT)

நாமக்கல்லில் நேற்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் கலந்து கொண்ட நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நாமக்கல், 

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஆசியா மரியம், மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் இயக்க குழுவின் தலைவர் ரஞ்சித்குமார் ஆகியோர் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து சிறிது தூரம் ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் மோகனூர் சாலை, உழவர் சந்தை, மணிக்கூண்டு வழியாக சென்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தை வந்தடைந்தது.

இதில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் என மொத்தம் 750-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, குடிநீரை சிக்கனமாய் பயன்படுத்துவோம், குழாய்களில் குடிநீர் வீணாவதை தவிர்ப்போம், சுத்தமே சுகாதாரம், மழைநீரே நீர்வளத்தின் ஆதாரம், நிலத்தடி நீரை பாதுகாப்போம், வானத்தின் மழைத்துளி வையத்தின் உயிர்த்துளி, விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி, சிறுதுளி பெருவெள்ளம் என்ற வாசகங்களை முழங்கியபடி சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மகளிர் திட்ட இயக்குனர் டாக்டர் மணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மணிவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story