திருவிடைமருதூர் அருகே தீயில் கருகி பசுமாடு சாவு உழவு எந்திரம்-குழாய்கள் எரிந்து நாசம்


திருவிடைமருதூர் அருகே தீயில் கருகி பசுமாடு சாவு உழவு எந்திரம்-குழாய்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 10 July 2019 11:00 PM GMT (Updated: 10 July 2019 6:53 PM GMT)

திருவிடைமருதூர் அருகே தீயில் கருகி பசுமாடு பரிதாபமாக இறந்தது. உழவு எந்திரம் மற்றும் குழாய்கள் எரிந்து நாசமாயின.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திரு விடைமருதூர் அருகே உள்ள அம்மன்பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (வயது50). விவசாயி. இவருக்கு சொந்தமான வயல் அதே பகுதியில் உள்ளது. அந்த வயலில் ஜெயபாண்டியன் பம்பு செட் அமைத்து உள்ளார். அதன் அருகே சிமெண்டு சீட்டு கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது.

கொட்டகையில் உழவு எந்திரம் மற்றும் குழாய்களை வைத்திருந்தார். மேலும் அங்கு சினைப்பிடித்த பசுமாடு ஒன்றையும் கட்டி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் மழை பெய்தது. இதனால் வெளியில் கட்டப்பட்டிருந்த சினைப் பிடித்த பசுமாட்டை, ஜெயபாண்டியன் கொட்டகைக்குள் கட்டி இருந்தார்.

நள்ளிரவில் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் சினைப்பிடித்த பசுமாடு தீயில் கருகி பரிதாபமாக இறந்தது. அங்கு இருந்த உழவு எந்திரம் மற்றும் குழாய்கள் எரிந்து நாசமாயின.

இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்தில் சினைப்பிடித்திருந்த பசுமாடு இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story