சிவகாசி பகுதியில் வீடு, வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்களை கணக்கெடுக்கும் போலீசார் - கூடுதல் இடங்களில் வைக்க வலியுறுத்தல்


சிவகாசி பகுதியில் வீடு, வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்களை கணக்கெடுக்கும் போலீசார் - கூடுதல் இடங்களில் வைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 July 2019 10:30 PM GMT (Updated: 10 July 2019 7:49 PM GMT)

சிவகாசி பகுதியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்து போலீசார் கணக்கெடுத்து வரும் நிலையில் அதிக இடங்களில் கேமராக்களை பொருத்த வலியுறுத்தி வருகிறார்கள்.

சிவகாசி,

சிவகாசி பகுதியில் டவுன், சிவகாசி கிழக்கு, திருத்தங்கல், மாரனேரி, எம்.புதுப்பட்டி, அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் என 6 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை தவிர மற்ற 5 போலீஸ் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு வழக்குகள் விசாரிக்கப்படுகிறது.

தொழில் நகரமான சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சகங்கள் உள்ளதால் இந்த தொழிலில் தொடர்புடைய பலர் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் வந்து செல்லும் வாய்ப்பு இருப்பதால் இங்கு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிகிறது. வீடு புகுந்து திருட்டு, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது, இருசக்கர வாகனங்களில் செல்லும்போது நகைபறிப்பு சம்பவங்கள் போன்றவை அடிக்கடி நடக்கிறது. இதை தடுக்க சிவகாசி உட்கோட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவகாசியில் வசிக்கும் ஒரு தொழில் அதிபரை இரவு நேரத்தில் சிலர் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட முயன்ற சம்பவம் நடந்தது. பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிவகாசி மற்றும் வெளியூர்களை சேர்ந்தவர்களை கைது செய்தனர். இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கும் போது அதில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்கவும், விசாரணையை மேம்படுத்தவும் போதிய ஆதாரங்கள் போலீசாருக்கு தேவைப்படும் நிலையில் தற்போது செல்போன்களின் செயல்பாடுகளை வைத்தும், கண்காணிப்பு கேமராக்களின் உதவிகளையும் போலீசார் அதிகம் நாடி வருகிறார்கள்.

கொள்ளை சம்பவம், நகை பறிப்பு சம்பவங்களின் போது கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசி டவுன் போலீசார் நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வைத்து கண்காணித்தனர். இதன் மூலம் பல குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அந்த கண்காணிப்பு கேமராக்கள் காணாமல் போனது. அதன் பின்னர் மீண்டும் கண்காணிப்பு கேமராக்களை வைக்க போலீசார் முன் வரவில்லை. இந்தநிலையில் தற்போது சிவகாசி பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை குறைக்கவும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும் கண்காணிப்பு கேமராக்களை வைக்க வலியுறுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக சிவகாசி பகுதியில் தற்போது ஈகிள் என்ற புதிய அமைப்பு விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு பூட்டிய வீடுகளில் நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் பணி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுத்து வருகிறார்கள். இந்த அமைப்பில் தற்போது 9 பேர் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தால் அதை கணக்கெடுத்து வருகிறார்கள். அந்த கட்டிடத்தில் எத்தனை கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது என்றும் கணக்கெடுத்து வருகிறார்கள்.

சிவகாசி பகுதியில் தற்போதைய நிலவரப்படி 500-க்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்கள் வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் இதை கணக்கெடுக்கும் போலீசார் போலீஸ் நிலையம் வாரியாக குறிப்பேடு தயாரித்து பராமரித்து வருகிறார்கள். சிலர் தங்களது நிறுவனங்கள், வீடுகளை கண்காணிக்கும் வகையில் மட்டும் கேமராக்களை பொருத்தி உள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்தது. அவர்களில் சிலரிடம் சாலையை கண்காணிக்கும் வகையில் கேமராக்களை மாற்றி அமைக்கும்படியும், கூடுதலாக புதிய கேமராக்களை பொருத்தவும் வலியுறுத்தி வருகிறார்கள்.

Next Story