5,376 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி; அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்


5,376 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி; அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
x
தினத்தந்தி 10 July 2019 10:15 PM GMT (Updated: 10 July 2019 7:50 PM GMT)

தேவகோட்டை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 5,376 மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியார் கலையரங்கில் தேவகோட்டை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 23 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 5 ஆயிரத்து 376 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் திட்டங்களிலேயே மிகவும் புரட்சிகரமான திட்டம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கும் திட்டமாகும். தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், அவர்கள் அறிவியல் முன்னேற்றத்தோடு கல்வி கற்க வேண்டும் என்பதை உணர்ந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை உருவாக்கினார்.

அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகளை நல்ல முறையில் மாணவர்கள் பயன்படுத்தி உயர் பதவிக்கு வர வேண்டும். அப்போது தான் அவர்களுக்கும், அவரது பெற்றோருக்கும், நாட்டிற்கும் பெருமையாக இருக்கும். இதை உணர்ந்து மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் எம்.பி. செந்தில்நாதன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஈஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுப்பிர மணியன், நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் பாண்டி மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

Next Story