குடிமராமத்து திட்ட பணிகள் முறையாக நடைபெறுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்


குடிமராமத்து திட்ட பணிகள் முறையாக நடைபெறுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 10 July 2019 10:45 PM GMT (Updated: 10 July 2019 8:26 PM GMT)

குடிமராமத்து திட்ட பணிகள் முறையாக நடைபெறுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அரசு கூடுதல் செயலாளர் பாலாஜி கூறினார்.

புதுக்கோட்டை,

குடிமராமத்து திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசு கூடுதல் செயலாளர் மற்றும் குடிமராமத்து பணி சிறப்பு அலுவலர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு கூடுதல் செயலாளர் மற்றும் குடிமராமத்து பணி சிறப்பு அலுவலர் பாலாஜி பேசியதாது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின் படி நீர் ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி வறட்சியை எதிர்கொள்ளவும், மழை நீரை சேமித்து புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி நீர் வள ஆதாரத்தை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்கு படுத்தவும், நீர் நிலைகளை மீட்டெடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் விவசாய பாசனதாரர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பணியான குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தெற்கு வெள்ளாறு வடிநில கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களை ஆழப்படுத்தி புனரமைக்கும் பொருட்டு குடிமராமத்து 2016-17-ம் ஆண்டு திட்டத்தில் 113 பணிகள் ரூ.3 கோடியே 37 லட்சத்திற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. குடிமராமத்து 2017-18-ம் ஆண்டு திட்டத்தில் 20 பணிகள் ரூ.7 கோடியே 62 லட்சத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு 18 பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் 2019-20-ம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் தெற்கு வெள்ளாறு வடிநில கோட்டம் மூலம் 59 பணிகள் ரூ.17 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் கல்லணை கால்வாய் கோட்டம் மூலம் 7 பணிகள் ரூ.2 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 66 பணிகள் ரூ.20 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள தமிழக அரசால் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, இதில் சில பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் தூர்வாருதல், ஏரியின் கரைகள் பலப்படுத்துதல், மதகுகள் மறுகட்டுமானம் செய்தல், கலிங்குகள் பழுது பார்த்தல் மற்றும் அடைப்பு பலகைகள் பொருத்துதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், இப்பணிகள் அனைத்தும் அந்தந்த பாசனத்தாரர்கள் மூலமாக மட்டுமே நிறைவேற்றப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிமராமத்து பணிகளை மேற்கொள்வது குறித்து அரசு வழிகாட்டி உள்ள நெறிமுறைகளை பின்பற்றி பணிகள் தரமாகவும், முறையாகவும் செய்வதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் குடிமராமத்து பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, தெற்கு வெள்ளாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சரவணன், தஞ்சாவூர் கல்லணைக்கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர்கள் உமாசங்கர், செந்தில்குமார் உள்பட அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அதைதொடர்ந்து மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வரும் மேலாத்தூர், குடிதாங்கிகுளம் மற்றும் மேற்பனைக்காடு பெரிய ஏரி ஆகிய இடங்களை அரசு கூடுதல் செயலாளர் நேரில் ஆய்வு செய்தார்.


Next Story