செஞ்சி அருகே, மோட்டார் சைக்கிளுடன் கிணற்றில் தவறி விழுந்த டிரைவர் பலி


செஞ்சி அருகே, மோட்டார் சைக்கிளுடன் கிணற்றில் தவறி விழுந்த டிரைவர் பலி
x
தினத்தந்தி 10 July 2019 10:15 PM GMT (Updated: 10 July 2019 9:00 PM GMT)

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிளுடன் கிணற்றில் தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி கிராமத்தை சேர்ந்தவர் மலையப்பன் மகன் சார்லஸ் என்ற ராகுல்(வயது 30), கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு செஞ்சியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். கலர்பாளையம்-ஜம்போதி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, நாய் ஒன்று திடீரென குறுக்கே ஓடியது. இதைபார்த்த ராகுல் நாய் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை இடதுபுறமாக திருப்பினார். அப்போது அவர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் சாலையோரம் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் கிணற்றின் உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதுபற்றி செஞ்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த ராகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story