ஓடும் ரெயிலில் செல்போன் பறித்து பயணியின் சாவுக்கு காரணமான இரட்டை சகோதரர்கள் கைது


ஓடும் ரெயிலில் செல்போன் பறித்து பயணியின் சாவுக்கு காரணமான இரட்டை சகோதரர்கள் கைது
x
தினத்தந்தி 10 July 2019 11:00 PM GMT (Updated: 10 July 2019 9:37 PM GMT)

ஓடும் ரெயிலில் செல்போன் பறித்து பயணியின் சாவுக்கு காரணமாக இருந்த இரட்டை சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

ஓடும் ரெயிலில் செல்போன் பறித்து பயணியின் சாவுக்கு காரணமாக இருந்த இரட்டை சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

செல்போன் பறிப்பு

மும்பை கோரேகாவை சேர்ந்தவர் சேக் கபர் சேக் (வயது53). நட்சத்திர ஓட்டலில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் மின்சார ரெயிலில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சர்னிரோடு ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் இவரது செல்போனை பறித்து கொண்டு ஓடினார்.

அவரை பிடிக்கும் முயற்சியில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த சேக் கபர் சேக் ரெயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்த வாலிபரை கண்டறிய தீவிர விசாரணை நடத்தினார்கள்.

சகோதரர்கள் கைது

இதில் அவர் நாலச்சோப்ராவை சேர்ந்த சிவம் சிங் (வயது25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாலச்சோப்ராவில் வீட்டில் இருந்த சிவம் சிங்கை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவரது சகோதரர் சத்யம் சிங்கிற்கும் இதில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இருவரும் இரட்டை சகோதரர்கள் ஆவர். இருவரும் சேர்ந்து 2005-ம் ஆண்டில் இருந்தே ரெயில் பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சத்யம் சிங்கையும் கைது செய்தனர்.

சேக் கபர் சேக்கிடம் பறித்த செல்போனை அவர்கள் மஜித் பந்தரை சேர்ந்த பாயூசாகான் என்ற பெண்ணிடம் விற்று இருந்தது தெரியவந்தது. திருட்டு செல்போனை வாங்கிய அந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story