மும்பையில் நடந்தேறிய கர்நாடக அரசியல் நாடகம் மந்திரியின் பிடிவாத போராட்டத்துக்கு பலன் கிடைக்கவில்லை


மும்பையில் நடந்தேறிய கர்நாடக அரசியல் நாடகம் மந்திரியின் பிடிவாத போராட்டத்துக்கு பலன் கிடைக்கவில்லை
x
தினத்தந்தி 10 July 2019 11:30 PM GMT (Updated: 10 July 2019 10:01 PM GMT)

கர்நாடகத்தில் குமாரசாமி அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் மும்பை ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மும்பை,

கர்நாடகத்தில் குமாரசாமி அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் மும்பை ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சமரசம் செய்து அழைத்து செல்ல வந்த கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமாரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. காலை 8.20 மணி முதல் ஓட்டல் வாசலில் காத்திருந்தார். அவ்வப்போது மழை பெய்தது. மழையிலும் அவர் நனைந்தார்.

மதியம் 2 மணி வரை அவர் ஓட்டல் வாசலில் காத்திருந்தது தான் மிச்சம். அவரை போலீசார் தங்களது வேனில் ஏற்றிச்சென்று பரபரப்பை ஏற்படுத்தினர். பின்னர் விமான நிலையம் அழைத்து சென்று அங்கிருந்து வலுக்கட்டாயமாக பெங்களூருவுக்கு அனுப்பி வைத்து விட்டனர். கர்நாடகத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் டி.கே. சிவக்குமார், மராட்டியத்தில் பணிந்து செல்ல வேண்டியதாயிற்று.

கர்நாடகத்தில் செல்வாக்கு பெற்ற அரசியல்வாதியான டி.கே.சிவக்குமாரை மும்பை போலீசார் கையாண்ட விதம் கவலை அளிப்பதாக மும்பை காங்கிரசார் குற்றம் சாட்டினர்.

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு குமாரசாமி அரசு அமைவதற்கு காரணமானவர் இந்த டி.கே. சிவக்குமார் தான். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவினர் வலையில் வீழ்ந்து விடாமல், அவர்களை சிறை வைத்து குமாரசாமியை அரியணையில் ஏற வைத்து அழகு பார்த்தவர் இவர் தான். ஆனால், இந்த தடவை என்னவோ அவரது முயற்சி பலிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது.

எம்.எல்.ஏ.க்களை சந்தித்தே தீருவேன் என்று மும்பை ஓட்டல் முன்பு பிடிவாதமாக இருந்த மந்திரி டி.கே. சிவக்குமார் அவ்வப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் இங்கு சமரசம் பேசத்தான் வந்துள்ளேன். ஆயுதம் கொண்டு வரவில்லை. யாருக்கும் தீங்கு செய்ய வரவில்லை. எனது நண்பர்களுடன் (எம்.எல்.ஏ.க்கள்) காபி அருந்தி அவர்களுடன் பேச வந்துள்ளேன். பா.ஜனதாவினர் ஓட்டலுக்குள் சுதந்திரமாக சென்று வருகிறார் கள். ஆனால், எங்களை விட மறுக்கிறார்கள். இந்த பிரச்சினையில் பா.ஜனதாவினர் தலையிடவில்லை என்கிறார்கள். அப்படியானால் எங்களை ஏன் உள்ளே விட மறுக்கிறார்கள்.

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எனது சிறந்த நண்பர். நான் இந்த ஓட்டலில் அறையை முன்பதிவு செய்துள்ளேன். எனது நண்பர்கள் இங்கு உள்ளனர். அவர்களுக்கும், எங்களுக்கும் சில பிரச்சினைகள் இருக்கலாம். எங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் சந்திக்கும்போது, எங்களை ஏன் விட மறுக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மும்பையில் நேற்று பல மணி நேரமாக நடந்த கர்நாடக அரசியல் நாடகம் மராட்டிய மக்களின் கவனத்தையும் ஈர்த்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Next Story