பெட்ரோல் போட பணம் இல்லை: வாலிபர் முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.1 லட்சம் வழிப்பறி 3 பேர் கைது


பெட்ரோல் போட பணம் இல்லை: வாலிபர் முகத்தில் மிளகாய் பொடி தூவி  ரூ.1 லட்சம் வழிப்பறி 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 11 July 2019 4:26 PM GMT)

மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து போனதால், நண்பரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கும் திட்டம் தோல்வி அடைந்தது.

செங்குன்றம்,

பெட்ரோல் போட பணம் இல்லாததால் வாலிபர் முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.1 லட்சம் வழிப்பறி செய்த ஆந்திராவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் துராபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 26). இவர், மோட்டார் சைக்கிளில் ரூ.1 லட்சத்துடன் செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தார். பாடியநல்லூர் பாலாஜி நகர் அருகே வந்தபோது, அங்கு நின்ற 3 பேர், பார்த்திபனை வழி மறித்து அவர் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்தை பறித்தனர்.

இதனால் கண் எரிச்சல் தாங்காமல் பார்த்திபன் அலறினார். சத்தம்கேட்டு ஓடிவந்த அங்கிருந்த பொதுமக்கள், மர்மநபர்கள் 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர். அப்போது அந்த வழியாக வந்த செங்குன்றம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழழகன் மற்றும் போலீசாரிடம் 3 பேரையும் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிருத்வி (28), கோபி (29), ஆஞ்சநேயலு (24) என்பதும், நகைக்கடையில் பணியாற்றும் நண்பரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கும் திட்டம் தோல்வி அடைந்ததால், வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர்கள் கூறியதாவது:-

ஆந்திர மாநிலம் விஜய வாடாவை சேர்ந்தவர் சந்தீப் (21). அங்குள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர், மாதத்தில் 4 தடவை ரூ.10 லட்சத்துடன் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு வந்து சவுகார்பேட்டையில் உள்ள ஒரு கடையில் தங்க கட்டிகளை வாங்கி செல்வது வழக்கம்.

நகைக்கடை உரிமையாளர் தரும் ரூ.10 லட்சத்தை கொள்ளையடிக்க திட்டமிட்ட சந்தீப், இதுபற்றி தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ராகுல் என்பவரிடம் தெரிவித்தார். ராகுல், ஆந்திர மாநிலம் கரீம் நகர் ஜக்கரியாபேட்டையைச் சேர்ந்த தனது நண்பர்களான பிருத்வி (28), கோபி (29), ஆஞ்சநேயலு (24) மற்றும் ஆசிப், சாகர் ஆகிய 5 பேருடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் வகுத்தார். கொள்ளையடிக்கும் பணத்தை அனைவரும் பங்கிட்டு கொள்ளலாம் என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி சந்தீப், ரூ.10 லட்சத்துடன் பஸ்சில் இருந்து கீழே இறங்கும்போது, அவர் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு கொள்ளை அடித்தால் போலீசாருக்கு சந்தேகம் வராது எனவும் திட்டம் தீட்டினர்.

நேற்று முன்தினம் இரவு சந்தீப், வழக்கம்போல் ரூ.10 லட்சத்துடன் தங்க கட்டிகள் வாங்க விஜயவாடாவில் இருந்து தனியார் பஸ்சில் சென்னை வந்தார். தங்கள் திட்டத்தின்படி பிருத்வி, கோபி, ஆஞ்சநேயலு ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், ஆசிப், சாகர் ஆகிய 2 பேரும் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சந்தீப் வந்த தனியார் பஸ்சை பின் தொடர்ந்து வந்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் கவாலி அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதால் ஆசிப், சாகர் இருவரும் அங்கேயே நின்றுவிட்டனர். பிருத்வி, கோபி, ஆஞ்சநேயலு ஆகியோர் மட்டும் சந்தீப் சென்ற பஸ்சை பின்தொடர்ந்து வந்தனர்.

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் போலீஸ் செக்போஸ்ட் அருகே வந்தபோது, இவர்கள் வந்த மோட்டார் சைக்கிளிலும் பெட்ரோல் தீர்ந்துபோனது. இதனால் இவர்களாலும் சந்தீப்பை பின்தொடர்ந்து செல்ல முடியாமல் அங்கேயே நின்றுவிட்டனர்.

இதற்கிடையில் நேற்று அதிகாலையில் சந்தீப் வந்த பஸ், மாதவரம் புதிய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. சந்தீப், கொள்ளை திட்டத்தை அரங்கேற்ற தனது நண்பர்களுக்கு போன் செய்தார். ஆனால் அவர்களின் போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதனால் ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கும் திட்டம் தோல்வி அடைந்ததை உணர்ந்த சந்தீப், நேரடியாக சவுகார்பேட்டைக்கு சென்று அங்குள்ள நகைக்கடையில் ரூ.10 லட்சத்துக்கும் தங்கக்கட்டிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் விஜயவாடாவுக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் பெட்ரோல் போட பணம் இல்லாததால் பிருத்வி, கோபி, ஆஞ்சநேயலு ஆகியோர் பாடியநல்லூர் பாலாஜி நகர் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த வழியாக ரூ.1 லட்சத்துடன் வந்த பார்த்திபன் மீது மிளகாய் பொடியை தூவி பணம் பறிக்க முயன்றதும், பின்னர் பொதுமக்களிடம் சிக்கியதும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் கைதான 3 பேர் மீதும் செங்குன்றம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைதான 3 பேரையும் திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story