கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு பற்பசையில் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்


கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு பற்பசையில் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 July 2019 11:00 PM GMT (Updated: 11 July 2019 5:46 PM GMT)

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு பற்பசையில் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் திருச்சி வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை, திருச்சி விமான நிலையத்தில் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 6 பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள், தூத்துக்குடியைச் சேர்ந்த நியாஸ், சென்னையை சேர்ந்த சல்மான்கான், ரியாஸ்கான், லியாக்கத் அலி, அமான்அலிகான் மற்றும் இளையான்குடியைச் சேர்ந்த ரசூலுதீன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுடைய உடைமைகளை பரிசோதனை செய்தபோது, அவர்கள் அணிந்து வந்த பேண்ட்டில், பற்பசையுடன்(பேஸ்ட்) தங்க துகள்களை கலந்து மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

அதன் மொத்த எடை 2,430 கிராம் இருந்தது. அதை உருக்கி பற்பசையில் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பிரித்து எடுத்தனர். அதில் 1,832 கிராம் தங்கம் இருந்தது. அதனையும், மேலும் அவர்கள் சங்கிலி வடிவிலும், கட்டி வடிவிலும் மறைத்து வைத்திருந்த 1,317 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து பிடிபட்ட 6 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 6 பேரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 7 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சிக்கு விமானத்தில் வந்த 6 பயணிகளிடம் இருந்து ரூ.1 கோடிக்கு மேல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story