6 வயது சிறுவன் சித்ரவதையா? நெல்லையில் தந்தை அளித்த புகாரில் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை


6 வயது சிறுவன் சித்ரவதையா? நெல்லையில் தந்தை அளித்த புகாரில் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை
x
தினத்தந்தி 11 July 2019 10:00 PM GMT (Updated: 11 July 2019 6:19 PM GMT)

நெல்லையில் 6 வயது சிறுவனை சித்ரவதை செய்ததாக தந்தை அளித்த புகாரின்பேரில் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லையில் 6 வயது சிறுவனை சித்ரவதை செய்ததாக தந்தை அளித்த புகாரின்பேரில் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம்

திருச்சியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 30). அக்குபஞ்சர் டாக்டராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 2008-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்தார். அப்போது நெல்லையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

இவர்கள் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மகேஷ் வீட்டில் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து காதல்ஜோடி கடந்த 2008-ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

வெளியுலக நண்பர்கள்

அதன்பிறகு அவர்கள் திருச்சியில் வசித்து வந்தனர். அவர்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மனைவி தொடர்ந்து பல்வேறு சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதனால் அவருக்கு வெளியுலக நண்பர்கள் தொடர்பு கிடைத்தது. பலருடன் சேர்ந்து பாட்டு பாடுவதுடன் டிக்-டாக் மூலம் கருத்துகள் பதிவிட்டு வந்தார். இது மகேசுக்கு பிடிக்கவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

கோபித்துக்கொண்டு தனது மகனுடன் அந்த பெண் நெல்லைக்கு வந்தார். இந்த நிலையில் அந்த பெண் விவாகரத்து கேட்டு நெல்லை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியானது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு சமூக வலைதளம் மூலம் நெல்லையை சேர்ந்த மற்றொரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது.

மகனுக்கு சித்ரவதை

இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பெண் தனது 6 வயது மகனை அழைத்து வந்து தனியாக வசித்து வருகிறார். 1-ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுவன் உடலில் காயம் இருந்ததால் பள்ளி நிர்வாகிகள் இதுபற்றி சிறுவனின் பாட்டி குடும்பத்தினரை அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் மகேசுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர், நெல்லை வந்து குழந்தைகள் நலக்குழுவினரிடம், தனது மகனை சித்ரவதை செய்வதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு அதிகாரி சந்திரகுமாரிடம் கேட்டபோது, “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் அந்த பெண் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினோம். மகேசுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகி விட்டதாக அந்த பெண்ணின் தாயார் என்னிடம் தெரிவித்தார். குழந்தையை பொறுத்த வரையில் அவர்கள் கூறும் அளவுக்கு காயம் இல்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த சிறுவன் பென்சில், ரப்பரை தொலைத்து விட்டு வந்துள்ளான். அதற்காக அந்த பெண், சிறுவனை அடித்ததாக கூறுகிறார்கள். அதை பற்றி நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தைகள் நலன் எங்களுக்கு முக்கியம். வருகிற 16-ந்தேதி குழந்தைகள் நலக்குழு முன்பு சிறுவனை ஆஜர்படுத்த வேண்டும் என்று அந்த பெண்ணிடம் கூறி இருக்கிறோம்“ என்றார்.

Next Story