குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 July 2019 11:00 PM GMT (Updated: 11 July 2019 6:40 PM GMT)

செல்லியம்மாபாளையத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, அந்தப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள செல்லியம்மாபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்தை சிறிது நேரம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இது தொடர்பான ஒரு மனு கொடுத்தனர். அதில், தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு கிராமத்தின் முக்கியமான ஒரு இடத்தில் 2 குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த குழாய்களில் தான் கிராம மக்கள் குடிநீர் பிடித்து வந்தனர்.

ஆனால் எங்கள் தெருவை சேர்ந்த பொதுமக்கள் அந்த குழாய்க்கு குடிநீர் பிடிக்க சென்றால், நீண்ட நேரம் காத்து கொண்டிருக்கின்ற நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறோம். இதற்கு காரணம் குழாய் அருகே வசிக்கும் மக்கள் அதிகமாக குடிநீர் பிடித்துக்கொள்கின்றனர்.

புதிய குடிநீர் குழாய் அமைக்க...

இதனால் எங்கள் தெரு வழியாக அருகே உள்ள கிராமத்திற்கு குடிநீர் செல்லும் ராட்சத குழாயின் அருகே ஊராட்சி செயலாளர் குழாய் அமைத்து குடிநீர் பிடித்து கொள்ளுமாறு, எங்களிடம் கூறியதை தொடர்ந்து, நாங்கள் அதில் குழாய் அமைத்து குடிநீர் பிடித்து வந்தோம். தற்போது அந்த குழாயை ஊராட்சி செயலாளர் அகற்றுமாறு கூறி வருகிறார். தற்போது நிலவும் குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு அந்த குழாயை அப்புறப்படுத்தக்கூடாது, அகற்றினால் அதற்கு பதிலாக எங்கள் தெருவில் பொதுவான இடத்தில் ஒரு புதிய குடிநீர் குழாயை அமைத்து, அதன் மூலம் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Next Story