திருவாரூர் மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் அதிகாரி பேச்சு


திருவாரூர் மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 11 July 2019 11:00 PM GMT (Updated: 11 July 2019 6:46 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட உள்ளது என அதிகாரி கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக கருந்தரங்கம் நேற்று நடந்தது. கருந்தரங்கிற்கு மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் குழுவை சேர்ந்த சிறு,குறு தொழில்துறை அமைச்சகத்தின் கூடுதல் ஆணையர் பியூஸ் ஸ்ரீவஸ்சதவா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆனந்த் முன்னிலை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளோம். இத்திட்டத்திற்காக மத்திய அரசின் சிறப்பு அதிகாரியாக ஜல்சக்தி அபியான் குழுவை சேர்ந்த கூடுதல் ஆணையர் பியூஸ் ஸ்ரீவஸ்சதவா வருகை தந்துள்ளார். இவர்களுடன் தொழில்நுட்ப வல்லுனர்கள் வருகை தந்துள்ளனர். திருவாரூர் மாவடடத்தில் நீர் மேலாண்மை தொடர்பாக 5 வட்டாரங்கள் தேர்வு செய்ய உள்ளோம். இந்த 5 வட்டாரங்களில் அடுத்து மூன்று மாதங்களில் நீர் செறிவூட்டுதல், நீர் சேமிப்பு உள்ளிட்டவைகள் செயல் படுத்தப்பட உள்ளோம்.

இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளில் நீர் மேலாண்மை தொடர்பாக மாவட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் ஜல்சக்தி அபியான் குழுவினர் நீர் மேலாண்மை தொடர்பான தொழில் நுட்பங்கள் குறித்து தெரிவிப்பார்கள். இதன்மூலம் வரும் காலங்களில் நிலத்தடி நீரை சேமிப்பது தொடர்பாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சிறு,குறு தொழில்துறை அமைச்சகத்தின் கூடுதல் ஆணையர் பியூஸ் ஸ்ரீவஸ்சதவா கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் நீர் செறிவூட்டல் மற்றும் நீர் சேமிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. நீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும். நீர் செறிவூட்டல் மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீரினை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகிய துறைகளில் மேற்கொண்டுள்ள நீர் மேலாண்மை தொடர்பான பணிகள் குறித்து அலுவலர்கள் ஜல்சக்தி அபியான் குழுவிடம் துறைவாரியாக விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் தொழில்நுட்ப வல்லுனர்கள் நீர் செறிவூட்டல் தொடர்பாக தொழில்நுட்ப யுக்திகளை கூறினர்.

கூட்டத்தில் துணை செயலாளர் (எஃகு தொழில்துறை அமைச்சகம்) யு.கே.நாயர், இயக்குனர் (வனத்துறை மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகம்) அசோக்குமார் பட்டீஸ்வரி, துணை இயக்குனர் (எஃகு தொழில்துறை அமைச்சகம்) என்.கே.சர்மா, துணை இயக்குனர் (பாதுகாப்புத்துறை அமைச்சகம்) சம்மர்த்து அகர்வால், தொழில்நுட்ப வல்லுனர் (வனத்துறை மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகம்) வெங்கடேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story