கொளத்தூர் அருகே தண்ணீர் தேடி வரும் யானைகள் கூட்டம் முழுவடை விவசாயிகள் பீதி


கொளத்தூர் அருகே தண்ணீர் தேடி வரும் யானைகள் கூட்டம் முழுவடை விவசாயிகள் பீதி
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 11 July 2019 6:47 PM GMT)

கொளத்தூர் அருகே தண்ணீருக்காக நீர்நிலைகளை தேடி வரும் யானைகள் கூட்டத்தால் முழுவடை விவசாயம் செய்த விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

கொளத்தூர், 

தமிழக-கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், நீருற்றுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தற்போது கடும் வறட்சி காரணமாக வறண்டு போய் உள்ளன.

இதனால் வனப்பகுதிகளில் உள்ள விலங்குகள் நீர்நிலைகளை தேடி வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளன. நேற்று பண்ணவாடி நீர்த்தேக்கப்பகுதிக்கு 14 யானைகள் கூட்டமாக வந்தன. இந்த யானை கூட்டம் அங்கிருந்த காவிரி நீரை பருகிவிட்டு அங்கு சோளம் பயிரிட்டிருந்த விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தன.

இந்த யானைகள் கூட்டத்தை பார்த்து முழுவடை விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். யானைகள் நடமாட்டம் குறித்து தகவல் அறிந்த மேட்டூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானைகள் கூட்டத்தை விரட்டி அடித்தனர்.

தண்ணீருக்காக நீர்நிலையை தேடி 14 யானைகள் கூட்டமாக பண்ணவாடி நீர்தேக்கப்பகுதிக்கு வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story