25 லட்சம் லிட்டருடன் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் தண்ணீர் இன்று சென்னை வருகிறது


25 லட்சம் லிட்டருடன் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் தண்ணீர் இன்று சென்னை வருகிறது
x
தினத்தந்தி 11 July 2019 11:00 PM GMT (Updated: 11 July 2019 6:52 PM GMT)

ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் சென்னைக்கு 50 வேகன்கள் கொண்ட ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) வில்லிவாக்கத்துக்கு வருகிறது. அங்கு ரெயிலை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னையில் அனைத்து ஏரிகளும் வறண்ட நிலையில் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் உட்பட பல்வேறு நீர் நிலைகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது.

இதுபோதுமான அளவு இல்லாததால், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை முடுக்கி விட்டது.

அதன்படி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.

1 கோடி லிட்டர்

இதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 வேகன்கள் கொண்ட ரெயில் ஜோலார்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டது. சோதனை அடிப்படையில் இவற்றில் கடந்த 2 நாட்களாக தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வந்தது. அதன்படி 50 ஆயிரம் லிட்டர் வீதம் 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு தடவை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து ஒரு நாளைக்கு 4 தடவைகளாக 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

ரெயில் வேகன்கள் 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். ஆனால் அந்த வேகன்களில் 50 ஆயிரம் லிட்டர் நிரப்பினால் தான் ரெயிலை இயக்குவதற்கு வசதியாக இருக்கும் என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுஇருந்தது.

ஆனால் தவறுதலாக வேகன்களில் 70 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டன. இதனால் 25 வேகன்களில் கூடுதலாக ஏற்றப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியே திறந்துவிடப்பட்டது. இதனால் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் அந்த பகுதியில் ஆறாக ஓடியது.

25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்ட முதல் ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது. ரெயில் சென்னையில் உள்ள வில்லிவாக்கத்துக்கு பகல் 12 மணி அளவில் வரவிருக்கிறது. இதனை சென்னை கழிவு நீர் அகற்றும் மற்றும் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

இந்த தண்ணீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் குடிநீர் ஏற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

மேற்கண்ட தகவலை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story