வேதாரண்யத்தில், சுட்டெரிக்கும் வெயில்: உப்பு உற்பத்தி 8 லட்சம் டன்னாக உயர்வு உப்பளங்களில் தேக்கம் அடையும் அபாயம்


வேதாரண்யத்தில், சுட்டெரிக்கும் வெயில்: உப்பு உற்பத்தி 8 லட்சம் டன்னாக உயர்வு உப்பளங்களில் தேக்கம் அடையும் அபாயம்
x
தினத்தந்தி 11 July 2019 10:45 PM GMT (Updated: 11 July 2019 6:58 PM GMT)

வேதாரண்யத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் உப்பு உற்பத்தி 8 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. உப்பளங்களில் உப்பு தேக்கம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேதாரண்யம்,

காவிரி ஆற்றின் கடைமடை மாவட்டமாக திகழ்கிறது நாகை மாவட்டம். இங்கு நெல் விவசாயம், மீன்பிடித்தல் மட்டுமின்றி உப்பு உற்பத்தி தொழிலும் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகை தொடங்கி கோடியக்கரை வரை 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்தாலும், காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை மட்டுமே நம்பி நாகை மாவட்ட விவசாயிகள் நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகிறார்கள்.

மழை நீரை தேக்கி வைக்க உரிய கட்டமைப்புகள் இல்லாதது, காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக கடலில் பாய்வது உள்ளிட்ட காரணங்கள் நாகை மாவட்ட விவசாயிகளை நஷ்டம் அடைய செய்து வருகின்றன.

இயற்கை அன்னையின் கருணை பார்வை விவசாயிகளுக்கு மட்டுமின்றி மீனவர்களுக்கும் தேவைப்படுகிறது. ஆண்டின் பெரும்பகுதி நாட்களில் கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்களால் கடலுக்கு சென்று மீன்பிடித்து வர முடிவதில்லை. பல்வேறு சிரமங்களுக்கு இடையே வருமானம் ஈட்டி வரும் விவசாயிகளையும், மீனவர்களையும் கடந்த ஆண்டு (2018) நவம்பர் 15-ந் தேதி வீசிய கஜா புயல் கடும் வேதனைக்கு உள்ளாக்கி விட்டது.

தென்னை, முந்திரி மர சோலையாக காட்சி அளித்த வேதாரண்யம் பகுதி புயல் காரணமாக இன்று வானம் பார்த்த பூமியாக காட்சி அளிக்கிறது. படகுகளும் புயலில் சிக்கி சேதம் அடைந்ததால் மீனவர்களும் சிரமத்தில் உள்ளனர். புயலின் கோர கரங்கள் வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பளங்களுக்குள் கடல் சேற்றை வாரி வீசின. இதனால் கடும் சேதத்தை சந்தித்த உப்பளங்களை உப்பு உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் மீட்டெடுக்க படாதபாடுபட்டனர்.

நாகை மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி சுழன்றடித்த கஜா புயலில் சிக்கி பெரும்பாலான மரங்கள் விழுந்து விட்டன. இதன் காரணமாக இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. வெயில் சுட்டெரிப்பது, உப்பளங்களில் உப்பு உற்பத்திக்கு ஏற்றதாக அமைந்து இருக்கிறது. வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்கள் புயலுக்கு பின்னர் படிப்படியாக சீரமைக்கப்பட்டது. தற்போது இங்கு உப்பு உற்பத்தி கடந்த ஆண்டை விட அதிகரித்து இருக்கிறது.

இந்த பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் புயலுக்கு பின்னர் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மழை இல்லாமல், வெயில் சுட்டெரிப்பதால் உப்பு உற்பத்தி அளவு 8 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து உப்பு உற்பத்தி தீவிரமாக நடப்பதால், உப்பளங்களில் உப்பு தேக்கம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் உப்பை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலையில், உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

உப்பு உற்பத்தி அதிகரித்து இருப்பதால் அதன் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு டன் உப்பு ரூ.600-ல் இருந்து ரூ.500 ஆக குறைந்து விட்டது. தொடர்ந்து மழை பெய்யாவிட்டால் உப்பு உற்பத்தி அதிகமாகி மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story