ஓசூர் பகுதியில் நீர் மேலாண்மை குறித்து மத்திய குழுவினர் ஆய்வு


ஓசூர் பகுதியில் நீர் மேலாண்மை குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 11 July 2019 10:15 PM GMT (Updated: 11 July 2019 7:18 PM GMT)

ஓசூர் பகுதியில் நீர் மேலாண்மை குறித்து மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு துறை துணை செயலாளர் மோகன் ரங்கநாதன், பொறியாளர் மாதவ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அலசநத்தம் ஏரியில் சமூக மேம்பாட்டு நிதியின் கீழ் தூர் வாரி, மரங்கள் நடும் பணிகளையும், தேர்பேட்டை ஏரி தூர் வாரப்படும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தகொண்டபள்ளி ஊராட்சியில் பெக்கலிக்கான் ஏரி தூர் வாரும் பணி, மத்திகிரி கால்நடைப்பண்ணை வளாகத்தில் 3,000 மரக்கன்றுகள் நடவுள்ள இடங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

பூனப்பள்ளி அருகே சின்னபேளகொண்டபள்ளியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட குளத்தினை தூர்வாரும் பணியையும் பார்வையிட்டனர். மேலும், நாகொண்டபள்ளியில் ரூ. 2 லட்சம் மதிப்பில் பண்ணை குட்டை அமைக்கவுள்ள இடம் மற்றும் கானாற்றின் ஓடையில் ரூ.5 லட்சம் மதிப்பில் தடுப்பணை அமைக் கவுள்ள இடத்தினையும் அவர்கள் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது, ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆப்தா பேகம், பாலாஜி, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், தாசில்தார் முத்துப்பாண்டி, பொறியாளர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story