மாவட்டத்தில் 7 இடங்களில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது


மாவட்டத்தில் 7 இடங்களில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 11 July 2019 10:15 PM GMT (Updated: 11 July 2019 8:00 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 இடங்களில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

கிருஷ்ணகிரி, 

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 7 தாலுகாக்களில், அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடத்தப்படுகிறது.

அதன்படி கிருஷ்ணகிரி தாலுகாவில் கீழ் பையூர், ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூரில், போச்சம்பள்ளி தாலுகா அந்தேரிப்பட்டியில், பர்கூர் தாலுகா வரட்டனப்பள்ளியில், சூளகிரி தாலுகா ஒசஹள்ளியில், ஓசூர் தாலுகா கன்னூரில், தேன்கனிக்கோட்டை தாலுகா டி.தம்மாண்டரபள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

எனவே, இந்த சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று, தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story