கரூர் ஒன்றிய பகுதியில் மழைநீர் சேகரிப்புக்கான வழிவகைகள் குறித்து மத்தியக்குழுவினர் ஆய்வு


கரூர் ஒன்றிய பகுதியில் மழைநீர் சேகரிப்புக்கான வழிவகைகள் குறித்து மத்தியக்குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 11 July 2019 10:45 PM GMT (Updated: 11 July 2019 8:02 PM GMT)

கரூர் ஒன்றிய பகுதியில் மழைநீர் சேகரிப்புக்கான வழிவகைகள் குறித்து மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ள பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்கான வழிவகையினை மேற்கொள்ளும் பொருட்டு, ஜல் சக்தி அபியான் எனும் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர் ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்படும் நீர்மேலாண்மை குறித்தும், மழைநீர் சேகரிப்புக்கான வழிவகைகள் குறித்தும் அந்த குழுவை சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துணை செயலாளர் அச்சுட்டியா நந்த் ஜெனா, தேசிய நீர்நிலை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ராஜேஷ் சிங் உள்பட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது கரூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி விஜயலெட்சுமி, வாங்கல் ஊராட்சி செயலாளர் சுரேஷ் உள்பட வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து வாங்கல் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தலைமை ஆசிரியர் செல்வம் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்தியக்குழு அதிகாரிகள் அச்சுட்டியா நந்த் ஜெனா, ராஜேஷ் சிங் ஆகியோர் பேசுகையில், மனிதன் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானது தண்ணீர். தற்போது கரூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக் குறையை போக்க ஒவ்வொரு சொட்டு நீரை சேமிக்க வேண்டும் என்பதை ஆய்வின் போது மக்களிடையே வலியுறுத்தி வருகிறோம். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே அரசுடன் தனி நபர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story