ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் 14-ந் தேதி தொடங்குகிறது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் 14-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 11 July 2019 8:12 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் 14-ந் தேதி தொடங்குகிறது.

ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் எனும் ஆனித்திருமஞ்சன விழா வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இதில் வருகிற 14-ந் தேதியன்று நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து தங்க குடம் எடுத்து வரப்படுகிறது.

இதையொட்டி காலை 7 மணிக்கு திருமஞ்சனம் குடம் காவிரியில் இருந்து எடுத்து வந்து, காலை 9.15 மணியளவில் பெரிய சன்னதியை சேருகிறது. காலை 9.45 மணிக்கு அங்கி தொண்டைமான் மேட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாலை 4.15 மணிக்கு அங்கியை சுத்தம் செய்து ஒப்புவிக்கப்படுகிறது. இதில் ஜேஷ்டாபிஷேகத்தின்போது உற்சவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கிகளை களைந்து திருமஞ்சனம் செய்யப்பட்டு, பச்சை கற்பூரம் சாற்றப்பட்டு மீண்டும் அங்கிகள் சாற்றப்படும். மேலும் மூலவருக்கு தைலக்காப்பும் சாற்றப்படும். இரவு 10.30 மணிக்கு மங்கள ஆரத்தி நடக்கிறது.

மூலவர் சேவை கிடையாது

இதையொட்டி அன்று முழுவதும் மூலவர் சேவை கிடையாது. 15-ந் தேதியன்று பெருமாள் திருப்பாவாடை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 7.30 மணிக்கு தளிகை எடுத்தல், மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை தளிகை அமுது செய்தலும் நடக்கிறது. இதில் சந்தனு மண்டபத்தில் அதிக அளவில் சாதம் தயாரித்து சன்னதி முன் நிரப்பப்பட்டு நம்பெருமாளுக்கு அமுது செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. பின்னர் மங்கள ஆரத்தி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் பெருமாள் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு. இதைத்தொடர்ந்து 19-ந் தேதியன்று தாயார் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து தங்கக்குடம் எடுத்து, காலை 7.30 மணிக்கு காவிரியில் இருந்து திருமஞ்சன குடம் எடுத்து வருதலும் நடக்கிறது. திருமஞ்சனம் காலை 9.30 மணிக்கு தாயார் சன்னதியை வந்தடையும். காலை 10 மணிக்கு அங்கில்கள் தாயார் சன்னதி வசந்த மண்டபம் சேருதலும், மாலை 4 மணிக்கு அங்கில் சுத்தம் செய்து ஒப்புவிப்பதும், இரவு 8.30 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடக்கிறது. இதையொட்டி அன்று தாயார் சன்னதியில் சேவை கிடையாது.

சக்கரத்தாழ்வார்

20-ந் தேதி தாயார் திருப்பாவாடை நிகழ்ச்சியில் காலை 7 மணிக்கு தளிகை எடுத்தலும், மதியம் 12.30 மணிக்கு தளிகை அமுது செய்தலும், மதியம் 1 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு மேல் தாயார் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு. 26-ந் தேதி சக்கரத்தாழ்வார் மற்றும் கட்டழகிய சிங்கர் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி மதியம் 3 மணி வரை மூலஸ்தான சேவை கிடையாது. மேற்கண்ட தகவலை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story