ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 11 July 2019 10:15 PM GMT (Updated: 11 July 2019 9:56 PM GMT)

ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

ஈரோடு, 

ஈரோடு அருகே புஞ்சை லக்காபுரம் காட்டூர் வீதியை சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 24). இவர் டிப்ளமோ படித்துவிட்டு ஏ.சி. பழுதுபார்க்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ஈரோடு அருகே சின்னியம்பாளையம் அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகள் குகணா (19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். விஜயகுமாரும், குகணாவும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தபோது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இவர்களுடைய காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் விஜயகுமாரும், குகணாவும் திருமணம் செய்து கொள்வதற்காக நேற்று வீட்டில் இருந்து வெளியேறினார்கள். அவர்கள் ஈரோடு தந்தை பெரியார் திராவிட கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் குமரகுருபரன் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். பின்னர் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. இதையடுத்து இருதரப்பு பெற்றோர்களையும் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து விஜயகுமாருடன் குகணாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story