மடிக்கணினி வழங்கக்கோரி, மாவட்ட கல்வி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை - சிதம்பரத்தில் பரபரப்பு


மடிக்கணினி வழங்கக்கோரி, மாவட்ட கல்வி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை - சிதம்பரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 July 2019 10:45 PM GMT (Updated: 11 July 2019 11:51 PM GMT)

சிதம்பரத்தில் மடிக்கணினி வழங்கக்கோரி மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம்,

சிதம்பரம் பஜார் தெருவில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் அனைவரும், பள்ளிக்கூடத்துக்கு சென்று, அங்கிருந்த தலைமை ஆசிரியரை சந்தித்து, தங்களுக்கு ஏன் இன்னும் மடிக்கணினி வழங்கப்படவில்லை என கேட்டுள்ளனர். அதற்கு தலைமை ஆசிரியர் சரியாக பதில் கூறவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் மாணவர்கள் நேற்று காலை சிதம்பரம் பஸ் நிலையத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக ரெயில்வே பீடர் ரோட்டில் அரசு மகளிர் பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு சென்றனர். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்முருகன், ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், தங்களுக்கு இதுவரை அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை. அதனால் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், 5 பேர் மட்டும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திற்குள் சென்று, அதிகாரியிடம் மனு கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து மாணவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திற்குள் சென்று அங்கிருந்த சூப்பிரண்டு தனஞ்ஜெயனிடம், மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட சூப்பிரண்டு தனஞ்ஜெயன், இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் போராட் டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story