வாக்குப்பதிவு எந்திரங்கள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு அனுப்பி வைப்பு


வாக்குப்பதிவு எந்திரங்கள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 12 July 2019 11:15 PM GMT (Updated: 12 July 2019 4:55 PM GMT)

வாக்குப்பதிவு எந்திரங்கள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் மேற்கொள்ளப்பட்டிருந்த பழைய பதிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வேலூர் மாவட்ட நிர்வாகம், தேர்தல் பிரிவு இணைந்து தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலின் போது சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனினும் அந்த எந்திரங்கள் தாலுகா அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த எந்திரங்களை மீண்டும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கடந்த தேர்தலின் போது எந்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளை அழிக்கவும் அதை ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. நேற்று தாலுகா அலுவலங்களில் இருந்து 3,752 வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,876 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2,031 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவை வேலூர் டோல்கேட் அருகில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார் (தேர்தல்), வேலூர் தாசில்தார் ரமேஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

இந்த எந்திரங்களில் ஏற்கனவே செய்யப்பட்ட பதிவுகளை அழித்து மீண்டும் புதிதாக வேட்பாளர் விவரங்கள் பதிவும் செய்யும் பணி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும். அனைத்து எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளதா? அல்லது பழுது எதுவும் ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய பெல் நிறுவன என்ஜினீயர்களை கொண்டு முதல் நிலை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தாலுகா அலுவலகங்களில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் எந்திரங்கள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இப்பணி வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்திரங்களை பாதுகாக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story