முத்துப்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் - விவசாயி சாவு


முத்துப்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் - விவசாயி சாவு
x
தினத்தந்தி 12 July 2019 10:15 PM GMT (Updated: 12 July 2019 6:39 PM GMT)

முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள நத்தம் பின்னத்தூரை சேர்ந்தவர் முகமது யூசுப்(வயது 70). இவருடைய நண்பர் வேப்பஞ்சேரியை சேர்ந்த வெங்கடாசலம் (45). விவசாயிகளான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் முத்துப்பேட்டையில் இருந்து பின்னத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை வெங்கடாசலம் ஓட்டியுள்ளார். பின்னத்தூர் வளைவு அருகில் சென்றபோது பின்னால் இடும்பாவனத்தை சேர்ந்த பாலசுப்பிர மணியன்(35) என்பவர் ஓட்டிச்சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயம் அடைந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது யூசுப் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடாசலம் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story