லக்காபுரம்-கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்று பாலத்தில் பழுது; உடனடியாக சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை


லக்காபுரம்-கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்று பாலத்தில் பழுது; உடனடியாக சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 July 2019 10:45 PM GMT (Updated: 12 July 2019 7:22 PM GMT)

லக்காபுரம்-கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்று பாலத்தில் ஏற்பட்டு உள்ள பழுதினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு ,

ஈரோடு அருகே உள்ள லக்காபுரத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டைக்கு சுலபமாக செல்லும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு உள்ளது. ஈரோடு சுற்றுவட்டச்சாலை (ரிங் ரோடு) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த பாலம் ஈரோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் கனரக வாகனங்கள் செல்லும் சுலப வழியாக உள்ளது. இதுபோல் ஏராளமான கார்கள் தினசரி சென்று வரும் முக்கிய வழியாக இது உள்ளது. இந்த பாலத்தின் சில இடங்களில் பழுது ஏற்பட்டு உள்ளது. பாலத்தின் இணைப்பு பகுதிகளில் உள்ள இரும்பு பட்டைகள் பெயர்ந்து உள்ளன. இந்த இடங்களில் கான்கிரீட் பாலத்தில் உடைப்பும் ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர் கூறியதாவது:-

இந்த பாலம் கடந்த 2014-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. ரிங் ரோடு வழியாக வரும் அனைத்து வாகனங்களும் இந்த பாலத்தை கடந்து எளிதில் கொக்கராயன் பேட்டைக்கு செல்வதால் பயணபாதை சுலபமாக இருக்கிறது.

தற்போது பாலத்தில் ஆங்காங்கே பழுது ஏற்பட்டு இருப்பதால் அந்த பகுதிகளில் வாகனங்கள் செல்லும்போது பாலம் ஆடுவதுபோன்று இருக்கிறது. எனவே உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தில் உள்ள பழுதுகளை நீக்க வேண்டும் என்றார்.

Next Story