ராசிபுரம் நகரை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் வேண்டுகோள்


ராசிபுரம் நகரை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 July 2019 10:30 PM GMT (Updated: 12 July 2019 7:23 PM GMT)

ராசிபுரம் நகரை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ராசிபுரம், 

ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் சுகாதாரத்துறை அலுவலர்கள், ஓட்டல் அதிபர்கள், திருமண மண்டப நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கத்தினர், நகை கடை உரிமையாளர்கள் சங்கத்தினர், நுகர்வோர் வணிகர்கள் சங்கம், நகர வளர்ச்சி மன்றம், பள்ளி நிர்வாகிகள், பல்வேறு சேவை அமைப்புகள் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆணையாளர் கணேசன் பேசியதாவது:- வணிக நிறுவனங்கள், வீடுகளில் இருந்து குப்பை, கூளங்களை சாக்கடையில் கொட்டக்கூடாது. அப்படி செய்தால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும். சாக்கடைகளை தூர்வாரி சாக்கடை கழிவுநீர் எளிதாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு பொதுமக்களும் உதவ வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். ஒரு நிறுவனம் 100 கிலோ மக்கும் குப்பைகள் சேர்ந்தால் அதனை உரமாக்கி கொள்ளலாம். நகரில் நகராட்சி இடங்களிலோ அல்லது அவரவர்கள் இடங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும். டி.வி.எஸ். தெரு ஒருவழிப்பாதை விரைவில் சீரமைக்கப்படும். சுகாதாரம் சம்பந்தமாக எந்த நேரத்திலும் நகராட்சியை தொடர்பு கொள்ளலாம். நகரை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள், வியாபாரிகள் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் 100 கிலோவிற்கு மேல் குப்பைக்கழிவுகளை உருவாக்குவோர் மற்றும் பெருமளவு குப்பைக்கழிவுகளை உருவாக்குவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பல்வேறு அமைப்பினர், சங்கத்தினர் பேசும்போது, தங்களது குப்பைக் கழிவுகளை சாலைகளில், தெருக்கள் மற்றும் பொது இடங்களில் கொட்டுவதை தவிர்ப்போம் என்றனர். மேலும் கடைவீதி உள்பட முக்கிய இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். காந்திமாளிகை அருகேயுள்ள நகராட்சிக்கு சொந்தமான பழைய சைக்கிள் நிறுத்துமிடத்தை வாகனங்கள் நிறுத்தும் இடமாக ஒதுக்கி தரவேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை விரைவு படுத்தி சாலைகளை புதுப்பித்து தரவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் பேசினர்.

கூட்டத்தில் நகர வளர்ச்சி மன்ற தலைவர் வி.பாலு, அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவர் பாலாஜி, பொருளாளர் மன்னார்சாமி, நகைக்கடை உரிமையாளர்கள் ஜெயப்பிரகாஷ், நந்தலால், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் லோகநாதன், பாஸ்கரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் முத்தமிழ்செல்வன், பன்னீர்செல்வம், சேகர், சுப்பிரமணி, ராஜேந்திரன், தூய்மை இந்திய திட்ட மேற்பார்வையாளர் பிரிதிவிராஜ் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story