மீஞ்சூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த சென்னை கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் கட்டி வைத்து தர்மஅடி


மீஞ்சூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த சென்னை கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் கட்டி வைத்து தர்மஅடி
x
தினத்தந்தி 12 July 2019 11:15 PM GMT (Updated: 12 July 2019 7:56 PM GMT)

மீஞ்சூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த சென்னை கல்லூரி மாணவர்களை பொதுமக்கள் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த ரமணா நகரை சேர்ந்தவர் கஜலட்சுமி. இவர் மீஞ்சூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது குழந்தையை வீட்டுக்கு அழைத்துவர நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென கஜலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். அதிர்ச்சி அடைந்த கஜலட்சுமி கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் கொள்ளையர்களை விரட்டிச்சென்றனர். சிறிது தூரத்தில் சென்று கொண்டிருந்த 2 கொள்ளையர்களையும் அந்த பகுதி பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களின் கைகளை பின்புறம் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதில் கொள்ளையர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் மீஞ்சூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (20), பிரசாந்த் (19) என்பது தெரியவந்தது. சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வரும் அவர்கள் உல்லாச செலவுக்காக நகை திருட்டில் ஈடுபட்டு சிக்கிக்கொண்டனர்.

அவர்கள் இதுபோல் வேறு எந்த கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பொதுமக்கள் கட்டி வைத்து தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story