நேர்மையான அதிகாரிகள் காப்பாற்றப்பட வேண்டும்: போலீசார் மீது பொய்யான தகவலுடன் வழக்கு தொடர்ந்தால் நடவடிக்கை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நேர்மையான அதிகாரிகள் காப்பாற்றப்பட வேண்டும்: போலீசார் மீது பொய்யான தகவலுடன் வழக்கு தொடர்ந்தால் நடவடிக்கை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 July 2019 10:45 PM GMT (Updated: 12 July 2019 8:17 PM GMT)

போலீசார் மீது பொய்யான தகவலுடன் வழக்கு தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு, நேர்மையான அதிகாரிகள் காப்பாற்றப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தது.

மதுரை,

சிவகங்கையை சேர்ந்த சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததை தடுக்கவும், சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு–

தமிழகத்தில் வழக்குபதிவு செய்யும் போலீஸ் அதிகாரிகளை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வதாகவும், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வதாகவும் மிரட்டும் போக்கு அதிகமாக உள்ளது. வழக்கில் தொடர்பு உடையவர்களும், அவர்களின் உறவினர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

குற்ற வழக்கில் தொடர்புடையவர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளை கோர்ட்டு ஊக்குவிக்காது. வழக்கில் உண்மையும், சூழ்நிலையும் முக்கியம். வழக்குபதிவு செய்வதில் விதிமீறல் இருந்தால் மட்டுமே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியும். விதிமீறல் இல்லாத நிலையில் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது. அரசு ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் சட்டப்படி வரையறுக்கப்பட்ட தங்களது பொறுப்பையும், கடமைகளையும் நிறைவேற்றிட வேண்டும்.

காவல்துறையினரை மறைமுகமாக மிரட்டும் வகையில் ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. பொய்யான தகவல்களுடன் வழக்கு தொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டப்படியான கடமைகளை நிறைவேற்றும் காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் உள்நோக்கத்துடன், வெற்றுக்காரணங்களுடன் போலீசாரை மிரட்டும் வகையில் தாக்கல் செய்யும் மனுக்களை அதிகபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். பணி விதிகளின்படி பணி செய்ய மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது ரிட் மனு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம்.

நேர்மையான காவல்துறை அதிகாரிகள் காப்பாற்றப்பட வேண்டும். இல்லை என்றால் அவர்களின் பணித்திறன் பாதிக்கப்படும். நேர்மையான அதிகாரிகளுக்கு விருது கொடுத்து பாராட்டினால் அவர்கள் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அளவில் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவார்கள். நேர்மையான காவல்துறை அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதை போல, லஞ்சம்–ஊழலில் ஈடுபடும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதிலும் ஆர்வம் இருக்க வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரருக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையிலான சொத்து பிரச்சினை, அடிதடியில் முடிந்துள்ளது. இதனால் குற்ற வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மனுதாரர் சட்டப்படி சந்திக்க வேண்டும். இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


Next Story