ஏரியில் அனுமதி இன்றி மண் எடுத்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


ஏரியில் அனுமதி இன்றி மண் எடுத்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 July 2019 11:00 PM GMT (Updated: 12 July 2019 8:17 PM GMT)

பாப்பகன் ஏரியில் அனுமதி இன்றி மண் எடுத்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது.

கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் மேலப்பழுவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழையூர் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாப்பகன் ஏரி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரெயில்வே துறைக்கு அதிகப்படியான மண் தேவைப்படுகிறது என மாவட்ட அரசிடம் முறையான அனுமதி பெற்று மண் எடுத்துள்ளனர். அதற்கு ரெயில்வே துறை அரசுக்கு செலுத்தியுள்ள தொகையில் ஒரு பகுதியை கனிமவள நிதி என கீழையூர் கிராமத்திற்கும் அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக அந்த ஏரியில் 10-க்கும் மேற்பட்ட லாரிகள் மண்ணை எடுத்து வந்துள்ளன.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அரசிடம் அனுமதி கேட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது போல் தற்போது எடுத்து வருகின்றனர் என எண்ணி வந்தனர். ஆனால் கடந்த வாரம் அக்கிராமத்தினர் வரத்து வாய்க்காலை சரிசெய்து தரக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றிருந்தனர். அப்போது மாவட்ட கலெக்டரிடம், உங்களின் அனுமதியோடு தான் எங்கள் கிராமத்தில் மண் எடுத்து வருகின்றனரா? என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு மாவட்ட கலெக்டர், நாங்கள் எந்த அனுமதியும் வழங்கவில்லை என பதிலளிக்கவே அக்கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து நேற்று முன் தினம் இரவு ஏரியில் மண் எடுத்துக்கொண்டிருந்த 4 லாரிகளை அக்கிராம மக்கள் சிறை பிடித்து யாருடைய அனுமதியோடு மண் எடுத்து வருகிறீர்கள் என கேட்டபோது, தேசிய நெடுஞ்சாலை துறைக் காக எடுத்து வருகின்றோம் முறையான அனுமதி பெற்று இருக்கிறோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் கூறியதை நம்ப மறுத்த கிராம மக்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்து உடனடியாக வாருங்கள் நாங்கள் லாரியை சிறை பிடித்து வைத்து இருக்கிறோம் என தெரிவித்தனர்.

ஆனால் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று மாலை வரை எந்த அதிகாரியும் வராததால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் பாப்பகன் ஏரியில் அனுமதி இன்றி மண் எடுத்ததை கண்டித்து திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் வரும் வரை களைய முடியாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின் துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சாலை மறியலை கைவிடுங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என தெரிவித்தார்.

ஆனாலும் பொதுமக்கள் சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டு இருந்தனர். பின் கோட்டாட்சியர் சத்திய நாராயணன் மற்றும் தாசில்தார் கதிரவன் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்கள் உங்களுக்கு தெரியாமல் எப்படி மண் எடுத்து வருகின்றனர். இது யாருடைய அனுமதியோடு நடைபெற்று வருகிறது என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். பின் அதிகாரிகள் விசாரித்ததில் குறிப்பிட்ட நபர் ஒருவர் விவசாய நிலத்திற்கு மண் தேவைப்படுகிறது என அனுமதி வாங்கி சென்றதாகவும், அதை அவர் தவறாக பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு விற்று இருக்கலாம்.

இதுகுறித்து முறையாக விசாரித்து சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்தனர். மேலும் மாவட்ட கனிமவளத் துறையினருக்கு தகவல் தெரிவித்து இதுவரை எத்தனை யூனிட் மண் எடுத்து இருக்கின்றனர் என அளந்து அதற்கான தக்க அபராத தொகையும் விதிக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் சிறை பிடித்து வைத்திருந்த 4 லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் திருச்சி- சிதம்பரம் சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story