மந்தாரக்குப்பத்தில், கஞ்சா வியாபாரி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது


மந்தாரக்குப்பத்தில், கஞ்சா வியாபாரி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 12 July 2019 10:15 PM GMT (Updated: 12 July 2019 9:10 PM GMT)

மந்தாரக்குப்பத்தில் கஞ்சா வியாபாரி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கடலூர், 

நெய்வேலி மந்தாரக்குப்பம் ஓம்சக்திநகரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் மணிகண்டன் என்கிற பெங்களூரு மணி (வயது 25). இவர் கடந்த மாதம் 16-ந் தேதி சமூக வலைதளத்தில் தான் ஒரு கஞ்சா வியாபாரி என்றும், போலீசார் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் சவால் விட்டு பதிவு செய்தார்.

இதை அறிந்ததும் மந்தாரக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் இருந்த மணிகண்டனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.

தொடர்ந்து அவரை போலீசார் சோதனை செய்த போது, அவரிடம் 500 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது கஞ்சா வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாள், குண்டர் தடுப்பு சட்டத்தில் மணிகண்டனை கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினார். 

Next Story