ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி - தஞ்சையில், கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி - தஞ்சையில், கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 July 2019 10:45 PM GMT (Updated: 12 July 2019 9:11 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சையில், கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்றும், இந்த திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர், மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காவிரி டெல்டா பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் எரிவாயு போன்ற திட்டங்களை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று திடீரென தஞ்சை-திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை பார்த்த கல்லூரி பேராசிரியர்கள் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் கல்லூரி முன்பு மாணவர்கள் அமர்ந்து, விவசாயத்தை அழிக்கக்கூடாது, விவசாயம் வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் எரிவாயு திட்டங்கள் வேண்டாம் என்பன போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இந்த போராட்டம் குறித்து மாணவர்கள் கூறும்போது, ஏற்கனவே பருவமழை பொய்த்து வருவதாலும், காவிரியில் தண்ணீர் வராததாலும் சாகுபடி பரப்பளவு குறைந்து விவசாயம் அழிந்து கொண்டு இருக்கிறது. இப்போது ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி விவசாயத்தை முற்றிலும் அழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி டெல்டா பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

நியூட்ரினோ திட்டம், அணுக்கழிவுகள் போன்றவற்றால் தமிழகம் பாதிக்கப்படும். அணுக் கழிவுகளுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் தான் அணுக்கழிவு பாதுகாப்பானது என பதில் அளிக்கின்றனர். வெளிநாடுகளில் எல்லாம் கழிவு பொருட்கள், சாணம் போன்றவற்றில் இருந்து எரிவாயு எடுக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் விவசாய நிலத்தை அழித்து எடுக்க பார்க்கிறார்கள். இந்த திட்டங்களை கைவிடாவிட்டால் மாணவர்களை ஒன்று திரட்டி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியதை போன்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Next Story