அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பேச்சு


அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பேச்சு
x
தினத்தந்தி 13 July 2019 11:00 PM GMT (Updated: 13 July 2019 5:41 PM GMT)

அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கூறினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 5 ஆயிரத்து 532 மாணவ- மாணவிகளுக்கு ரூ.7 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மாணவ- மாணவிகளின் நலனை கருதி பள்ளிக்கல்வித்துறைக்கென தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து ஏழை, எளிய மாணவ- மாணவிகளின் நலனை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. 5 லட்சத்து 3 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு ரூ.667 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் இந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டிற்கு 6 ஆயிரத்து 209 மாணவ- மாணவிகளுக்கு ரூ.8 கோடி மதிப்பில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் படித்த மாணவ- மாணவிகளுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படும்.

இந்தியாவில் எந்தவெரு மாநிலத்திலும் இல்லாத வகையில் பள்ளிக்கல்வித்துறைக்கென விலையில்லா நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. எனவே, அரசின் அனைத்து நலத்திட்டங்களையெல்லாம் மாணவச் செல்வங்கள் பெற்று கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். நான் (தாமரை ராஜேந்திரன்) கல்வி பயின்ற காலத்தில் 7 கிலோ மீட்டர் நடந்து வந்து தான் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால், தற்போது இலவச பஸ் அட்டை, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுவதால், மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி என்ற ஏற்றத்தாழ்வு இல்லாத வகையில் பல நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலன் கருதி பல நல்லத் திட்டங்கள் தந்து பள்ளிக்கல்வித்துறையை சிறந்த முறையில் செயல்படுத்தி ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் மாணவ- மாணவிகளுக்கு மிக அற்புதமான திட்டமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சங்கர், ஆவின் துணைத்தலைவர் தங்க.பிச்சைமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அ.தி.மு.க. ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story