வெவ்வேறு சம்பவங்களில் 2 தொழிலாளிகள் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் 2 தொழிலாளிகள் தற்கொலை
x
தினத்தந்தி 13 July 2019 9:30 PM GMT (Updated: 13 July 2019 6:21 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம், 

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

தொழிலாளி தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலபொம்மையாபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் சுப்புராஜ் (வயது 30). திருமணம் ஆகாதவர். இவர் ஒரு வெல்டிங் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தற்போது சுப்புராஜ், ஊருக்கு அருகே புதிதாக வெல்டிங் ஒர்க்‌ஷாப் அமைக்க முடிவு செய்து பாதி அமைத்து உள்ளார். மீதி அமைக்க போதிய பணம் இல்லாததால் உறவினர்களிடம் பணம் கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் தற்போது பணம் இல்லை என்று கூறி விட்டனராம்.

இதனால் மனமுடைந்த சுப்புராஜ் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு அருகே உள்ள குளத்தின் கரையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு, அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுப்புராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 47). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி மாரித்தாய் (45). இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் மாடுகள் வளர்த்து வந்தனர். நேற்று காலையில் மாரித்தாய் மாடுகளில் பால் கறந்து விற்க சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜா திடீரென்று தூக்குப்போட்டு தொங்கினார்.

அப்போது அங்கு வந்த மாரித்தாய் கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் சென்று, ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story