வரி வருவாயில் மாநில அரசுகளுக்கான பங்கில் 9 சதவீதத்தை குறைக்கிறது மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு


வரி வருவாயில் மாநில அரசுகளுக்கான பங்கில் 9 சதவீதத்தை குறைக்கிறது மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 July 2019 11:15 PM GMT (Updated: 13 July 2019 7:31 PM GMT)

வரி வருவாயில் மாநில அரசுகளுக்கான பங்கில் 9 சதவீதத்தை மத்திய அரசு குறைப்பதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

திருச்சி,

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019-2020-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பற்றிய கலந்தாய்வு திருச்சியில் நேற்று ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது. இதில் சிறப்புவிருந்தினராக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பட்ஜெட்டை ஒப்பிட்டு அவர் பேசியதாவது:-

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருந்த போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் மறுநாளே அந்த பேச்சு அடிபட்டு விட்டது. கடந்த 2018-2019-ம் நிதி ஆண்டில் பொருளாதாரம் மந்த கதியில் இருந்தது. இதை மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவில் ஆண்டுக்கு 10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதனை கண்டுகொள்ளவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் வேலையின்மை அதிகரித்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது வேலைவாய்ப்பு இல்லாமை 7.8 சதவீதமாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 4 கோடியே 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். சேமிப்பு பற்றி இந்த பட்ஜெட்டில் எந்த ஊக்கமும் கொடுக்கவில்லை. சேமிப்பில் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட அச்சத்தில் இருந்து இந்தியா இன்னும் மீளவில்லை.

இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவோம் என அறிவித்துள்ளது கவர்ச்சிகரமாக தான் உள்ளது. நிதி கமிஷனின் அறிக்கையின் படி மத்திய அரசின் வரி வருமானத்தில் 42 சத வீதம் மாநில அரசுக்கு பங்களிப்பு தர வேண்டும். ஆனால் மாநில அரசுகளுக்கு 9 சதவீத பங்கு தொகை குறைய போகிறது. இதனை மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும், குரல் எழுப்ப வேண்டும். நான் கூறுகிற கணக்கினை மாநில முதல்-அமைச்சர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதில் பிழை இருந்தால் திருத்தி கொள்கிறேன்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் இல்லை. நடுத்தர மக்கள் அவ்வப்போது பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு சுங்க வரியை உயர்த்தி உள்ளனர். பெட்ரோல், டீசல் மின்சாரம், ஆல்கஹால் போன்றவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. விவசாயத்தில் ஜீரோ பட்ஜெட் என்பது விவசாய இடுபொருட்கள் இல்லாமல் செய்யும் திட்டம் தான். இது செலவில்லாத விவசாயம் என்பது இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story